புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தவறான தகவலை பரப்புபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். இது குறித்து பேசி அவர் “ஒற்றுமையாக இருக்கும் நாட்டில் பிரிவினையை உண்டாக்கும் விதமாக சிலர் தவறான கருத்துக்களை பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.
மற்ற மாநிலங்களைச் சார்ந்தவர்கள் தமிழகத்திற்கு வருகை தந்து வேலை செய்வது போன்று தமிழர்கள் பலரும் மற்ற மாநிலங்களில் பணிபுரிந்து வருகின்றனர். நாட்டில் பிரிவினை உண்டாக்க நினைப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து 2 மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும்” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.