கடலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து : உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம்!!

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம் மற்றும் வட்டம் மதலப்பட்டு மதுரா, சிவனார்புரம் கிராமத்தில் இயங்கிவந்த தனியார் வெடிபொருள் தயாரிக்கும் ஆலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த மல்லிகா, என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் கடுமையான மற்றும் லேசான தீக்காயங்களுடன் கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுமதி, பிருந்தாதேவி, லட்சுமி,  செவ்வந்தி, மற்றும் அம்பிகா, ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 3 இலட்சம் ரூபாயும்,  காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.