திமுக ஆட்சியை அகற்ற சதி: முதல்வர் ஸ்டாலின் ஓப்பன் டாக்!

நாகர்கோவிலில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்

கருணாநிதி சிலையை திமுக தலைவரும் முதலமைச்சருமான

இன்று (மார்ச் 7) திறந்து வைத்தார்.

அதன்பின்னர் திமுக நிர்வாகிகளிடையே பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சியை கலைக்க சதி நடப்பதாக கூறினார்.

“‘திராவிட மாடல் என்று சொல்லி தமிழ்நாட்டு மக்கள் மனதை கவரக் கூடிய வகையில் சிறப்பாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்களே, இவர்களை இப்படியே விட்டால் நம்முடைய பிழைப்பு என்னாவது’ என்று கூறி நம் மீது புழுதி வாரி தூற்றிக் கொண்டிருக்கிறார்கள் நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படுபவர்கள்.

இந்த ஆட்சியை எப்படியாவது அப்புறத்த வேண்டும் என்பதற்காக சாதி கலவரத்தை தூண்டலாமா, மதக் கலவரத்தை தூண்டலாமா என்று சதி செய்து கொண்டிருக்கிறார்கள்.

திமுக தொடர்ந்து தேர்தல்களில் வெற்றி பெற்று வருகிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல்கள், சட்டமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தற்போது நடந்து முடிந்த இடைத்தேர்தல் என அனைத்திலும் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணி பலமாக உள்ளது. ஒற்றுமையாக இருக்கிறோம். இதே போல் மற்ற மாநிலங்களிலும் ஒற்றுமையாக இருந்தால் வெற்றியை எளிதாக பெறலாம் என எனது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசினேன்.

நம்முடைய குறிக்கோள் எல்லாம் 2024 மக்களவைத் தேர்தலை நோக்கி இருக்க வேண்டும். திமுகவினர் நமக்குள் உள்ள பிரச்சினைகளை தூக்கிப்போட்டுவிட்டு ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும்.

கலைஞரின் சிலையை திறந்து வைத்திருக்கிறோம். இதைவிட முக்கியமானது கலைஞர் எந்த நோக்கத்திற்காக இறுதிவரை போராடினாரோ அதற்காக நாமும் உழைக்க வேண்டும்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.