ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை கவர்னர் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார்.
தமிழக அரசு இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாவும் திருப்பி அனுப்பப்பட்டது. அதில் சில திருத்தங்களை செய்து மீண்டும் அனுப்பும்படி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
தொடர் தற்கொலை சம்பவங்கள் காரணமாக ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்யக் கோரி பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது.
இந்த தடை சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், அரசு சார்பில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கான உரிய காரணங்களை விளக்காததால் தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. மேலும், இந்த அவரச சட்டத்திற்கு ஆளுநரும் உடனடியாக ஒப்புதல் அளித்தார். ஆனால், அந்த அவசர சட்டம் காலாவதியாகிவிட்டது.
அதே சமயத்தில் தமிழக சட்டப்பேரவையில் இயற்றிய தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்து வந்தார்.
மேலும், இந்த தடை சட்ட மசோதா குறித்து ஆளுநர் எழுப்பிய சந்தேகங்களுக்கு தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இரு மாதங்கள் ஆகிய நிலையில், இன்று மேலும் சில திருத்தங்களை செய்து மீண்டும் அனுப்பும்படி, மசோதாவை தமிழக அரசுக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார்.