பயணங்கள் முடிவதில்லை படத்தில் இடம் பெற்ற “இளையநிலா பொழிகிறதே” பாடலில் கிடார் இசை வாசித்து புகழ்பெற்றவர் கிடாரிஸ்ட் ஆர். சந்திரசேகர்.இவர் இளையராஜாவுக்கு முன்பாக பிரபல இசையமைப்பாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர்-கணேஷ், திவாகர் ஆகியோரிடம் கிடாரிஸ்டாக சந்திரசேகர் பணியாற்றியுள்ளார்.
சந்திரசேகர் மூன்று முடிச்சு படத்தில் இடம் பெற்ற “வசந்தகால நதிகளிலே” பாடலில் மவுத் ஆர்கன் வாசித்தும் உள்ளார். தமிழ் மட்டுமல்ல சந்திரசேகர் கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களில் பணியாற்றினார்.
இந்நிலையில், திரைக்கு பின்னால் உயிரோட்டமான பணியை செய்து வந்த தமிழ் சினிமாவில் பிரபல கிடாரிஸ்ட் ஆர். சந்திரசேகர் நேற்று உயிரிழந்தார்.
இதுதொடர்பாக இயக்குநர் சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இளையராஜாவின் இளைய நிலா பொழிகிறதே என்ற பாடலுக்கு கிட்டார் வாசித்த R.சந்திரசேகர் மறைந்தார். எம்.எஸ். விஸ்வநாதனின் ‘வசந்தகால நதிகளிலே’ என்ற பாடலுக்கு மவுத் ஆர்கன் வாசித்ததும் இவரே. அதே போன்று டி ராஜேந்தர் படங்களுக்கு பாடல் மற்றும் பின்னணி இசை போன்றவற்றை அமைத்துக் கொடுத்தவரும் இவரே.
இசையமைப்பாளர் ஆர்.சந்திரசேகர் என்னுடைய விளம்பர படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது மகன் சஞ்சய் மற்றும் மருமகள் மகாலட்சுமி ஆகியோரும் இசைக்கலைஞர்களே. எல்லோரும் என்னுடைய விளம்பர படத்தில் பணியாற்றியுள்ளார்கள். 1995-2000 வரை என்னுடைய விளம்பர படங்களில் தொடர்ந்து பணியாற்றினார்கள்.அதன் பிறகு நான் உலக சினிமாவிற்கு வந்த பிறகு தொடர்பு விட்டுப் போய்விட்டது.
கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலையிலிருந்து அசோக் பில்லர் போகும் வழியில் காம்தார் நகரில் அவரது இல்லம் உள்ளது.எத்தனையோ முறை அவரது இல்லம் தேடி இசையை வாங்கப் போய் இருக்கிறேன். இன்றும் வருகிறேன் சந்திரசேகரன் சார்.அன்று ஒரு நாள் எனக்காக வாசித்த இளைய நிலாவை கிட்டார் இசைக் கருவியில் இன்றும் வாசிப்பீர்களா, என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதே போல் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் உள்பட திரைத்துறையினர், ரசிகர்கள் பலரும் கிடாரிஸ்ட் ஆர். சந்திரசேகர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.