சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது:-
“சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை தாலுகாவில் கண்டதேவி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்படி, 100 நாள் வேலைத்திட்டத்தில் பல்வேறு நபர்களுக்கு வேலைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் பெயர், தாயார் பெயர், வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றி வரும் நபர்கள் உள்ளிட்டோரின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய செயல்கள் சட்டவிதிமுறைகளுக்கு மாறாக நடைபெறுகின்றன. இந்த செயல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த மனு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி தெரிவித்துள்ளதாவது, “மனுதாரரின் கோரிக்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. மனுதாரரின் கோரிக்கை மற்றும் மனு குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை செய்து, பன்னிரண்டு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.