“ரூ.1 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார்” – பெண் டிசைனர் மீது ஃபட்னாவிஸ் மனைவி பரபரப்பு புகார்

தனக்கு பெண் ஒருவர் ரூ.1 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக பரபரப்பு புகார் ஒன்றை போலீசிடம் கொடுத்திருக்கிறா அம்ருதா ஃபட்னாவிஸ்.  

மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவியான அம்ருதா ஃபட்னாவிஸ், தனியார் வங்கி ஒன்றில் நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் தனக்கு பெண் ஒருவர் ரூ.1 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக பரபரப்பு புகார் ஒன்றை போலீசிடம் கொடுத்திருக்கிறார் அம்ருதா ஃபட்னாவிஸ்.

அந்த புகாரில், “கடந்த 2021 நவம்பரில் அனிக்ஸா என்ற பெண் என்னை தொடர்பு கொண்டார். தான் ஒரு டிசைனர் என்றும் தனது டிசைனில் உருவான உடைகள், நகைகள், காலணிகளை நான் கலந்துகொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் அணிந்து கொள்ளும்படியும், இதன்மூலம் தனது பிராண்ட் பிரபலமடையும் என்றும் அப்பெண் என்னிடம் கேட்டுக்கொண்டார். நானும் அந்தப் பெண் மீதான அனுதாபத்தில் அவற்றை வாங்கி வைத்துக் கொண்டேன். இருப்பினும் அவர் கொடுத்த பொருட்களை நான் எந்தவொரு நிகழ்ச்சியிலும் பயன்படுத்தியதாக நினைவில் இல்லை. அவற்றை நன்கொடையாக பிறருக்கு கொடுத்துவிட்டேன்.

image
ஒருநாள் அனிக்ஸா  தனது தந்தைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறி, ஒரு கவரில் கடிதம் ஒன்றை கொடுத்தனுப்பினார். அதை திறந்து பார்த்தபோது கையால் தெளிவில்லாமல் எழுதப்பட்டிருந்ததால் என்னால் அதை புரிந்து படிக்க முடியவில்லை. அக்கடிதத்தை ஓரமாக வைத்துவிட்டேன். இன்னொரு நாள் அனிக்ஸா எனது காவலாளியிடம் பொய் சொல்லிவிட்டு எனது காரில் அமர்ந்தார். அப்போது அவர் என்னிடம், சூதாட்டக்காரர்கள் குறித்து போலீசில் புகார் அளிப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்றும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமலே அவர்களிடமிருந்து பணத்தை கறக்க முடியும் என்றும் அனிக்ஸா என்னிடம் கூறினார். இதையடுத்து அவரை எனது காரிலிருந்து இறக்கிவிட்டேன். அதன்பின் அவரது போன் அழைப்புகளை நான் ஏற்காமல் இருந்துவந்தேன்.

image
இந்நிலையில், பிப்ரவரி 16 அன்று இரவு 9.30 மணியளவில், அனிக்ஸா என்னை தொடர்புகொண்டு, வழக்கு ஒன்றில் சிக்கியுள்ள அவரது தந்தையின் நிலையைக் கூறியதுடன், அவரை வழக்கிலிருந்து விடுவிக்க உதவி செய்தால் ரூ.1 கோடி தருவதாக என்னிடம் கூறினார். இதை அவர் சொன்னதும் உடனடியாக தொலைபேசி அழைப்பைத் துண்டித்து, அவருடைய செல்போன் எண்ணை பிளாக் செய்துவிட்டேன்” என்று ஃபட்னாவிஸ் காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில் கூறியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.