லஞ்ச ஒழிப்பு சோதனைலாம் சரிதான்… நடவடிக்கை என்ன..? டிடிவி தினகரன் கேள்வி

லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு உள்ளாகியுள்ள அரசு அலுவலகங்களில் கிடைக்கும் ஆவணங்களை கொண்டு அதிகாரிகள் மீதும் துறை அமைச்சர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது; “தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள், சார்பதிவாளர், வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர் என்று செய்திகள் வருகின்றன.

இதற்கு முன்பு முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட சோதனைகளின் அடிப்படையில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன? எத்தனை பேர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? என்ற பதில் வெளிப்படைத் தன்மை இல்லை.

அரசு துறைகளில் முழுமையாக லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் உண்மையிலேயே இந்த அரசுக்கு இருக்குமானால், சோதனைக்கு உள்ளான அரசு அலுவலகங்களில் இருந்து கைப்பப்பற்றப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் உயர் அதிகாரிகள், துறைகளின் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்” என இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் இன்று பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். திருவள்ளூர், நசரத்பேட்டை போக்குவரத்து துறை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரை கண்டதும் கையில் இருந்த பணத்தை ஊழியர்கள் தூக்கி எறிந்தனர். அங்கு கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து, ஆர்.டி.ஓ. இன்ஸ்பெக்டர் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். வெளி ஆட்களை பணியில் அமர்த்தி சோதனைச் சாவடி ஆய்வாளர் பணம் வசூல் செய்வதாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.