சீனாவை போல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்படுமா? – மத்திய அரசு பதில்!

இணைய விளையாட்டுகளுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கும் திட்டம் ஏதுமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா காலத்திற்கு பிறகு குழந்தைகள், மாணவர்கள் இடையே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆன்லைன் வகுப்பிற்காக மாணவர்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு வந்து சேர்ந்தது. ஆனால், செல்போன் பயன்பாடு நன்மைகள் அதிகம் இருப்பது போல், ஆன்லைன் கேம் போன்ற தீமைகளும் அவர்கள் இடையே வந்து சேர்ந்தது. ஆன்லைன் கேம் மாணவர்களின் நேரங்களை அளவு கடந்து எடுத்துக் கொள்கிறது. பல மாணவர்களும் இதுபோன்ற விளையாட்டிற்கு அடிமையாகிப் போகிறார்கள். மைதானங்களில் விளையாடி வந்தவர்களை தற்போது வீட்டிற்குள்ளேயே முடக்கவிட்டது ஆன்லைன். இளைஞர்கள் மட்டுமின்றி வயது வந்தோர் பலரும் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி அதிலேயே மூழ்கி கிடக்கிறார்கள். இதனால், குழந்தைகள், மாணவர்களுக்கு பல நாடுகளிலும் ஆன்லைன் கேமிற்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில், நேற்று நடந்த மக்களவையில் இணைய விளையாட்டுகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்படுமா என்பது குறித்து மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்பி விஷ்ணு தத் சர்மா கேள்வி எழுப்பினார். “இணைய விளையாட்டுகளை குறைப்பது தொடர்பான திட்டம் எதுவும் உள்ளதா? ஆன்லைனில் வன்முறை வீடியோ கேம்களின் புதிய போக்கு உருவாகியுள்ளது. அதை கருத்தில்கொண்டு, ஒரு வாரத்திற்கு அதிகபட்சம் மூன்று மணிநேரம் வரை குழந்தைகள் ஆன்லைன் கேம்களை விளையாட அனுமதிக்கும் திட்டம் ஏதும் அரசுக்கு உள்ளதா? சீனா செய்ததைப் போல கேமிங் இணையதளங்கள் இந்த விதியை அமல்படுத்த வேண்டுமா?” என்று விஷ்ணு தத் சர்மா கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “இணைய விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்பு மற்றும் சவால்கள் குறித்து மத்திய அரசு விழிப்புணர்வுடன் உள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு கொள்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இணைய விளையாட்டுகளை குறிப்பிட்ட கால அளவு மட்டுமே விளையாடும் அளவுக்கு கட்டுப்பாடு எதுவும் ஏற்படுத்தும் திட்டமில்லை” என தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.