தமிழ்நாட்டில் திடீர் மழை ஏன்? சென்னையில் அத்திக்கட்டி, ஆலங்கட்டி மழை எப்படி?

தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக வெப்ப அலை வீசியது. காலையில் வெகு சீக்கிரமாகவே வெயிலின் தாக்கம் தொடங்கி விடுகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்குள் இப்படியா? எனக் கேட்கும் அளவிற்கு வெப்பம் வாட்டி எடுத்தது. பகல் நேரங்களில் வயதானவர்கள், கர்ப்பிணிகள் வெளியில் நடமாட முடியாத நிலை காணப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

வானிலை தகவல்

இதற்கிடையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், வரும் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (மார்ச் 17) காலை ஜில்லென்று வானிலை காணப்பட்டது.

அத்திக்கட்டி, ஆலங்கட்டி மழை

அடுத்த சில மணி நேரங்களில் மழை வெளுத்து வாங்க தொடங்கியது. குறிப்பாக தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அத்திக்கட்டி, ஆலங்கட்டி மழை பெய்து ஆச்சரியம் அளித்தது. இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னையில் இன்று காலை பெய்திருப்பது கோடை மழை.

மழைப்பொழிவின் அளவு

முகலிவாக்கம், பெருங்குடியில் 6 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. ஆலந்தூர், மீனம்பாக்கத்தில் 5 சென்டிமீட்டர், கோடம்பாக்கம், தரமணியில் 4 சென்டிமீட்டர், நந்தனத்தில் 1 மில்லிமீட்டர், எம்.ஆர்.சி நகரில் 6 மில்லிமீட்டர், வில்லிவாக்கத்தில் 12 மில்லிமீட்டர், மழை பெய்துள்ளது. கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பதால் இந்த திடீர் மழை பெய்துள்ளது.

என்ன காரணம்?

அத்திக்கட்டி, ஆலங்கட்டி மழை என்பது மேகங்கள் உருவாகும் அளவு மற்றும் கடல் காற்றை பொறுத்தது. வரும் 20ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை தொடரும். சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மழை நீடிக்கும் என்று தெரிவித்தார்.

லேட்டஸ்ட் வானிலை அப்டேட்

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று நண்பகல் வெளியிட்ட தகவலின்படி, வரும் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் ஆக காணப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.