தமிழகத்தின் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லி செல்வதற்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் நிரூபர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் தெரிவித்ததாவது, “23ம் புலிகேசி படம் போன்று தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு உள்ளது. தினந்தோறும் காலை முதல்வர் டிஜிபியிடம் நம்மைப் பற்றி சமூக வலைதளங்களில் யார் தவறாக பேசியுள்ளனர் என்று தான் கேட்கிறார்.
அவர்களை கைது செய்ய தான் இந்த அரசு தீவிரமாக உள்ளது. சமூக வலைதளத்தில் தவறான கருத்தை பதிவிடுபர்களை கைது செய்வதற்கு தான் இந்தக் காவல்துறை ஓடிக் கொண்டிருக்கிறது. முதல்வருக்கு சமூக வலைதளத்தில் வரும் கருத்துகள் முள் போன்று குத்துகிறது. அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் கொலை மற்றும் கொள்ளை அதிகரித்துள்ளது.
ஆனால், இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றுத் தெரிவித்தார். மேலும், அவரிடம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வைக்கும் விமர்சனம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “இந்த விமர்சனங்களை எல்லாம் நல்லதாக தான் பார்க்கிறேன். ஆனால், பாஜகவின் வளர்ச்சியை அவர்கள் ரசிக்க விரும்பவில்லை.
யாராக இருந்தாலும் அவர்களின் கட்சி வளர வேண்டும் என்றுதானே நினைப்பார்கள். கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் அவர்கள் பாஜகவை வளர்க்க வேண்டும் என்று நினைத்தால் அது முட்டாள் தனம். நான் பாஜகவில் இருந்து கொண்டு வேறு கட்சியை வளர்க்க வேண்டும் என்று நினைத்தால் நான் முட்டாள்.” என்று பதிலளித்தார்.