பெட்டிக்கடையில் மிட்டாய் திருடியதாக சிறுவர்களை கட்டி வைத்து அடித்த விவகாரத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (65) என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை மதியம் சந்தோஷ் கடையின் பாதி கதவை மூடி வைத்து கடைக்குள்ளே உறங்கியுள்ளார்.
அப்போது கடைக்கு வந்த பள்ளி மாணவர்கள் ஐந்து பேர் சந்தோஷ் உறங்குவதை பார்த்து கடையில் இருந்த மிட்டாய்களை திருடியதாக கூறப்படுகிறது. அப்போது கடைக்கு வந்த சந்தோஷின் மகள் கூச்சலிடவே மூன்று மாணவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
இரண்டு பேரை பிடித்து மிட்டாய் திருடியதற்காக சத்தம் போட்டு உள்ளார். இந்நிலையில் கடையில் உறங்கிக் கொண்டிருந்த சந்தோஷ் எழுந்து வந்து மாணவர்களை தூணில் கட்டி வைத்து அடித்ததாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து வீடியோ காட்சிகளின் ஆதாரத்தை வைத்து கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜன் அளித்த புகாரின் அடிப்படையில், கடை உரிமையாளர் சந்தோஷ் மீது திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in