தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது 150க்கு மேல் சென்றுள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் 186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 3,038 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 21,179 என அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 91% பேருக்கு XBB வகை கொரோனா என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி கடந்த பிப்ரவரி முதல் மார்ச் வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 144 பேரின் மாதிரிகள் மரபணு மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. இதில் 86 மாதிரிகள் தீவிர பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களிடம் இருந்தும், 36 மாதிரிகள் சமூகத்தில் இருந்தும், 20 மாதிரிகள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களிடம் இருந்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த 144 மாதிரிகளில், 131 மாதிரிகள் XBB வகை கரோனா தொற்றுகள், 10 மாதிரிகளில் BA.2 வகை தொற்றுகள், 2 மாதிரிகளில் BA.5 வகை கரோனா தொற்றும், 1 மாதிரியில் B.1.1 வகை கரோனா தொற்று என்பது தெரிய வந்துள்ளது. இதன்படி 91 சதவீத மாதிரிகளில் XBB வகை கரோனா தொற்று என்பது உறுதியாகி உள்ளது தற்போது தமிழகத்தில் XBB மற்றும் BA.2 வகை ஒமைக்ரான் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது என்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு மக்கள் கூடும் இடங்களில் கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.