இன்றைய சட்டப்பேரவை வினாக்கள் விடைகள் நேரத்தில் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய அவர், “மதுரை மேற்கு தொகுதியில் ஒரு அரசு கல்லூரி கூட கிடையாது. மதுரை மாநகரிலே ஒரே ஒரு அரசு கல்லூரி 1962ல் தொடங்கப்பட்டது தான். அதற்குப் பிறகு தொடங்கவில்லை அதுவும் மகளிர் கல்லூரி மட்டுமே உள்ளது. மற்ற எல்லாம் தனியார் கல்லூரியாக தான் உள்ளது. மாநகராட்சி பகுதியில் எந்த கல்லூரியும் இல்லாமல் உள்ளது. என்னுடைய தொகுதியில் 3.5 ஏக்கர் நத்தம் புறம்போக்கு இடம் காலியாக உள்ளது.
ஏற்கனவே இந்த கேள்வியை முதல்முறையா கேட்டேன். அமைச்சரும் 10 ஆண்டுகள் நீங்கள் அமைச்சராக இருந்து ஒன்றும் செய்யவில்லை. ஆனால் எங்கள் முதலமைச்சர் நிச்சயமாக செய்வார். கல்லூரி கொடுப்பார் நான் வாங்கி கொடுப்பேன் எனப் போன ஆண்டே சொன்னார். பேரவை தலைவரே பார்த்து நிறைவேற்ற சொல்லுங்க… உங்க கையில தான் இருக்கு”, என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, “முன்னாள் அமைச்சர் கோரிக்கை வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சரும் அதை செய்து கொண்டிருக்கிறார்.
மதுரையை பொறுத்த வரை உறுப்பு கல்லூரிகள் எல்லாம் அரசு கல்லூரிகளாக ஏற்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் ஏழு உறுப்பு கல்லூரிகள் கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளது. மதுரையை பொருத்தவரை கல்வியிலே மிகச்சிறப்பாக இருப்பது தான். பல்கலைக்கழகமே அங்கு இருக்கிறது. ஆகவே உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று வருங்காலங்களில் தேவை ஏற்படும் பட்சத்தில் அதுகுறித்து பரிசீளிக்கப்படும்”, என்றார்.