ராணிப்பேட்டை : சோஷியல் மீடியா ட்ரெண்ட் மோகத்தில் லைக்கிற்கு ஆசைப்பட்டு அரக்கோணம் அருகே தண்ணீர் பாம்பை வாயால் கடித்து துப்பி வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட 3 இளைஞர்களை வனத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சின்னகைனூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மோகன் (33) சூர்யா (21) மற்றும் சந்தோஷ் (21). இந்த மூவரும் கடந்த மாதம் 15ஆம் தேதியன்று அவர்களது குடியிருப்பு பகுதிக்கு அருகே வந்த தண்ணீர் பாம்பு ஒன்றை கையில் பிடித்துள்ளனர். மோகன் அந்தப் பாம்பை துன்புறுத்தி, அதனை வாயால் கடித்து இரு துண்டுகளாக்கியுள்ளார். அதனை வீடியோவாக பதிவு செய்து அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ தீயாகப் பரவிய நிலையில், சென்னை வனத்துறை அலுவலகத்தின் வைல்ட் லைஃப் கிரைம் கண்ட்ரோல் பிரிவினர் ஆற்காடு வனச்சரகர் சரவணபாபுவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களையும் ஆற்காடு வனச்சரகர் சரவணபாபு தலைமையிலான வனத்துறை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்கள் மீது வனவிலங்குகளை துன்புறுத்துதல், வீடியோ பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.