சென்னை : பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ஆதிபுருஷ் படத்தின் போஸ்டர் கடந்த வாரம் வெளியான நிலையில், போஸ்டரால் படக்குழுவிற்கு புது பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ், சைஃப் அலிகான், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ராமாயணக் கதையை மையமாக வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஓம் ராவத்.
ஆதிபுருஷ்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் பாகுபலி திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். சாஹோ,ராதே ஷ்யாம் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெற்றுத்தராததால், அடுத்த ஒரு வெற்றிப்படத்தை கொடுத்து ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். தற்போது இவர் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகி உள்ள ஆதிபுருஷ் படத்தில் நடித்து வருகிறார்.

பான் இந்திய படமாக
ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் பிரபாஸ் ராமராகவும், க்ரீத்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படம் பெரும் பொருட் செலவில் உருவாகி வருகிறது.

டீசரால் எழுந்த சர்ச்சை
ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் 2ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி சராயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது. ஆனால், டீசரை பார்த்த நெட்டிசன்ஸ், படத்தின் கிராபிக்ஸ் வேலையைப் பார்த்து கொதித்து போனார்கள். டீசரைப் பார்த்தால் கார்ட்டூன் கதாபாத்திரத்தைப் பார்ப்பது போல இருக்கிறது என்று கண்டபடி விமர்சித்ததால்,படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளிவைத்தது.

புது போஸ்டர்
ஆதிபுருஷ் திரைப்படம் ஜூன் 16ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராமநவமி அன்று படத்தின் புது போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அந்த போஸ்டரில், ராமராக பிரபாஸ், சீதாவாக க்ரீத்தி சனோன், லக்ஷ்மணனாக சன்னி சிங், அனுமனாக தேவதத்தா நாகே ஆகியோர் இருந்தனர்.

வழக்குப்பதிவு
இந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள புதிய போஸ்டர் படக்குழுவிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. மும்பை சகினாக்கா காவல் நிலையத்தில் மும்பை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான ஆஷிஷ் ராய் மற்றும் பங்கஜ் மிஸ்ரா மூலம் சஞ்சய் தினாநாத் திவாரி என்பவர் இந்து மத கதாபாத்திரங்களை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி புகார் கொடுத்துள்ளார்.

இந்து மதத்தை புண்படுத்திவிட்டார்
அதாவது பகவான் ஸ்ரீ ராமர் இந்து வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்கைக்கு மாறான உடையில் இருக்கிறார். இது இந்து மதத்தை புண்படுத்தும் செயலாகும் என்று படக்குழு மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 295 (A), 298, 500, 34 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமான அந்த புகார் மனுவில் கூறியுள்ளனர்.