
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 19 புதிய அறிவிப்புகளை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வெளியிட்டார். அதன்படி, பேரிடர் முன்னறிவிப்புகளை தெரியப்படுத்த TN-Alert என்ற கைப்பேசி செயலி மற்றும் மேம்படுத்தப்பட்ட TN-SMART செயலி உருவாக்கப்படும் என தெரிவித்தார்.
வெள்ள பாதிப்பிற்கு உள்ளாகும் கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கொள்ளிடம் ஆற்றின் இடது கரை 14 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பலப்படுத்தப்படும் என்றும், தமிழ்நாட்டில் புதியதாக நிலநடுக்க கண்காணிப்பு நிலையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும், பதிவுபெற்ற சுய உதவிக் குழுக்களுக்கு கிராமங்களில் குடிசைத் தொழில் செய்ய ஏதுவாக பூமிதான நிலங்கள் வீட்டு மனைகளாக வழங்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தமிழ்நாடு நில சீர்திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘குடும்பம்’ என்ற வரையறையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை வழங்கும் பொருட்டு திருமணம் ஆகாத மகள்கள் மற்றும் திருமணமாகாத பேத்திகள் என்ற சொற்கள் நீக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
முன்னதாக வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் ஆன்லைன் வாயிலாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.