கள்ளக்குறிச்சி கலெக்டரின் ஷூவை.. கையில் தூக்கிச் சென்ற டவாலி.. வீடியோவால் பரபரப்பு – ஆக்சன் பாயுமா?

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தனது ஷூவை டவாலியை விட்டு தூக்கிச் செல்ல வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், மாவட்ட ஆட்சியருக்கு கண்டனம் தெரிவித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அரசாங்கத்தில் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள், தங்களுக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களை தங்கள் சொந்த வேலைக்கோ அல்லது எடுபிடி பணிகளுக்கோ பயன்படுத்தக் கூடாது என்பது சட்ட விதிமுறை. ஆனால், சில அதிகாரிகள் இந்த விதிமுறையை சட்டை செய்வதில்லை. தங்களுக்கு கீழ் வேலை செய்யும் ஊழியர்களை ஏதோ தங்கள் வீட்டு பணியாளர் போல நடத்துவதை நாம் பார்த்திருப்போம். அப்படியொரு சம்பவம்தான் தற்போது கள்ளக்குறிச்சியில் நடந்திருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் உள்ளது. உளுந்தூர்பேட்டை அருகே அமைந்துள்ள இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறும். இதில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். அதேபோல, அங்கு திருநங்கைகளில் அழகிப் போட்டியும் நடைபெறும்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா ஏப்ரல் 18-ம் தேதி தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு, திருவிழாவுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் அங்கு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத் நேற்று பார்வையிட்டார். அப்போது கூத்தாண்டவர் கோயிலுக்குள் செல்லவிருந்த அவர், தனது ஷீக்களை வாசலில் கழற்றி வைத்தார். பின்னர், தனது டவாலியை அழைத்து அந்த ஷூக்களை எடுத்து காரில் வைக்குமாறு சைகை செய்தார்.

இதையடுத்து, கலெக்டரின் ஷுக்களை தனது கையால் எடுத்த டவாலி, அதை தூக்கிச் சென்றார். அதன் பிறகு, கோயிலுக்குள் சென்ற கலெக்டர், அங்கு நடைபெறும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனிடையே, கலெக்டரின் ஷுவை டவாலி கையில் எடுத்துச் சென்றதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இது வைரலாக பரவி காண்பவர்களை திகைக்க செய்தது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. டவாலியும் ஒரு மனிதர் தான் என்ற எண்ணம் துளியும் இன்றி, தனது ஷூவை கையால் எடுத்துச்செல்ல வைத்த ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜகாவத் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.