சென்னை: ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு மற்றும் ஏப்ரல் 22-ம் தேதி ரம்ஜான் பண்டிகை வருவதை யொட்டி சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊருக்குச் செல்ல 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு வரும் நிலையில் சொந்த ஊருக்கு செல்ல பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு செல்ல மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில் தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதேபோல் அடுத்த வாரம் ஏப்ரல் 22ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
ஏப்ரல் 14ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழ்ப் புத்தாண்டு வருவதுடன், அதற்கு அடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதன் காரணமாக சென்னை கோயம்பேட்டில் இருந்து வியாழக்கிழமை கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்திருக்கிறது.
இதேபோல் ஏப்ரல் 22-ம் தேதி சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதன்படி, ஏப்ரல் 21-ம் தேதி 200 சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், “தொடர் விடுமுறையை முன்னிட்டு சேலம், விழுப்புரம், கோவை, கும்பகோணம், மதுரை போக்குவரத்துக் கழகங்கள் மூலம் வழக்கமாக தினந்தோறும் 2100 பேருந்துகள் இயக்கப்படும். ஆனால் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 500 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளோம். இதன்படி தமிழ் வருட பிறப்புக்கு 300 பேருந்துகளும் ரம்ஜான் பண்டிகைக்கு 200 பேருந்துகளும் என்று மொத்தம் 500 பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.