கர்த்துாம், சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையிலான மோதலும், கலவரமும் மூன்றாவது நாளாக தொடரும் நிலையில், இதில் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு எதிராக, பல்வேறு கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டின் துணை ராணுவ படையான ஆர்.எஸ்.எப்., எனப்படும் விரைவு உதவிப் படையினர், தற்போதைய ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் குதித்து உள்ளனர்.
இந்த மோதலில், தலைநகர் கர்த்துாமில் உள்ள விமான நிலையம், ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட இடங்களை துணை ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து, இவர்கள் மீது ராணுவப் படையினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து நாட்டின் பல பகுதிகளிலும், இரு தரப்பினருக்கும் இடையே உச்சகட்ட மோதல் நீடிக்கிறது.
துப்பாக்கிச் சண்டை, குண்டுவெடிப்பு போன்றவற்றால் கர்த்துாம் உள்ளிட்ட நகரங்கள் கலவர பூமியாக மாறி உள்ளன. மூன்று நாட்களுக்கு மேலாக தொடரும் கலவரத்துக்கு 100 பேர் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையே, மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்வதற்கு வசதியாக, மூன்று மணி நேரம் நேற்று சண்டை நிறுத்தப்பட்டது.
மோதலை நிறுத்துமாறு ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினரை ஐ.நா., சபை பொதுச் செயலர், அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும்.
இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த மறுத்து வருவதால் சூடானில் தொடர்ந்து போர் மேகம் சூழ்ந்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்தவர்
சூடானில் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளியான ஆல்பர்ட் அகஸ்டின் கேரளாவைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. ஈஸ்டர் பண்டிகைக்காக, மனைவி மற்றும் மகளை சூடான் வரவழைத்த ஆல்பர்ட், அடுத்த மாதம் குடும்பத்துடன் இந்தியா திரும்புவதாக இருந்துள்ளார். கடந்த 15ம் தேதி, வீட்டின் ஜன்னல் அருகே நின்றிருந்த ஆல்பர்ட்டை நோக்கி வந்த துப்பாக்கி குண்டு, அவரது உயிரை பறித்தது. ”இவரின் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளன. ஆல்பர்டின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன,” என மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்