மீன்பிடி தடைக்கால நிவாரணம் நாளை முதல் வழங்கப்படுகிறது..!!

புதுச்சேரியில் மீன்வளத் துறை சார்பில் மீனவர்களின் விசைபடகுகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்கப்பட்டு வருகிறது. டீசலுக்காக மீனவர்கள் நெடும் தொலைவு செல்ல வேண்டியுள்ளதால் அந்தந்த கிராமங்களில் டீசல் பங்க் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.முதல்கட்டமாக வீராம்பட்டினத்தில் ஐஓசி நிறுவனம் சார்பில் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. பாஸ்கர் எம்எல்ஏ முன்னிலையில் மீன்வளத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லட்சுமி நாராயணன் கூறியது: “மீன்பிடி தடைக் கால நிவாரணமாக ரூ.5,500 வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தொகையை உயர்த்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மீன்பிடி தடைக் கால நிவாரணத்தை முதல்வர் ரங்கசாமியின் அனுமதியின் பேரில் ரூ.6,500 ஆக உயர்த்தியுள்ளோம்.

உயர்த்தப்பட்ட மீன்பிடி தடைக் கால நிவாரணம் வரும் புதன்கிழமை முதல் வழங்கப்படும். இந்தத் தொகையை புதுவை, காரைக்கால், ஏனாம் பகுதிகளை சேர்ந்த 18 ஆயிரத்து 298 மீனவர்கள் பெறுகின்றனர். அரபிக் கடல் பகுதியில் உள்ள மாகி பிராந்தியத்தில் மீன்பிடி தடை காலம் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது. அப்போது அங்குள்ள 515 மீனவர்களுக்கு உயர்த்தப்பட்ட தடை கால நிவாரணம் வழங்கப்படும்.

புதுச்சேரியிலுள்ள மீனவ கிராமங்களில் மீனவர்களுக்கு கடலில் செல்ல மானிய விலையில் டீசல் தருகிறோம். இதர இடங்களில் சென்று வாங்கி படகுகளில் ஏற்றுவது சிரமமான காரியம். அதனால் 3 இடங்களில் முதல் கட்டமாக அந்த மீனவ கிராமப்பகுதிகளிலேயே டீசல் தரும் மையம் அமைக்கிறோம். குறிப்பாக நல்லவாடு, காலாப்பட்டு, வீராம்பட்டினத்தில் தற்போது அமைகிறது. மத்திய அரசிடம் பேசி இத்திட்டத்தை தொடங்கி உள்ளோம். மீனவ மக்களின வசதிக்காக அவர்களுக்காக இந்த பங்க் அமைகிறது. 3 மாதங்களில் அமையும்” என லட்சுமி நாராயணன் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.