Solar Eclipse 2023: சூரிய கிரகணம்.. 400 ஆண்டுகளுக்கு பின்.. அரிதான நிங்கலூ இந்தியாவில் தெரிந்ததா?

சூரிய கிரகணம் என்றாலே சூரியன் – சந்திரன் – பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும். அப்போது சூரியனின் ஒளி சந்திரனால் மறைக்கப்படும் என்ற விஷயம் தான் பலருக்கும் நினைவில் தோன்றும். இதில் பல வகைகள் உண்டு. அந்த லிஸ்டில் நிங்கலூ சூரிய கிரகணம் என்பது 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வானில் தெரியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

வளைய சூரிய கிரகணம்

முதலில் சந்திரனால் சூரியன் முழுமையாக மறைக்கப்பட்டு முழு சூரிய கிரகணமாக தோன்றும். பின்னர் வளைய கிரகணமாக தோன்றும். இதுவே இதன் சிறப்பம்சமாக சொல்லப்படுகிறது. அதென்ன நிங்கலூ என்று கேட்கிறீர்களா? ஆஸ்திரேலியாவின் வடமேற்கில் உள்ள நிங்கலூ என்ற பகுதியானது யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நன்றாக தெரியும்

இங்குள்ள கடற்பரப்பை சுற்றியுள்ள பகுதிகளை தான் நிங்கலூ என அழைக்கின்றனர். இந்தப் பகுதியில் சூரிய கிரகணம் தெளிவாக தெரியும் என்பதால் அதே பெயரை கிரகணத்திற்கும் வைத்துவிட்டனர். இதை இந்தியாவில் பார்க்க முடியாது. ஆஸ்திரேலியா மற்றும் பசுபிக் பெருங்கடல் பகுதிகளில் மட்டுமே பார்க்கலாம். இதையடுத்து தென்கிழக்கு ஆசியா, இந்திய பெருங்கடல், அண்டார்டிகா ஆகிய பகுதிகளில் பகுதி அளவு தெரியும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

கிரகணத்தின் உச்சம்

விஞ்ஞானிகள் கணிப்பின் படி, இந்திய நேரப்படி இன்று (ஏப்ரல் 20) அதிகாலை 3.34 மணி முதல் 6.32 வரை தென்பட்டது. கிரகணத்தின் உச்ச நிலை என்பது 4.29 மணி முதல் 4.30 மணி வரை இருந்தது. அப்போது நெருப்பு வளைய சூரிய கிரகணமாக தோன்றியது. இந்தியர்கள் பார்க்க முடியாது என்பதால் இணையத்தில் நேரலையில் கண்டு ரசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆன்லைன் வசதிகள்

இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கிரகணம் வந்தாலே சாஸ்திரங்கள் கூறிய விஷயங்கள் என சிலவற்றை பின்பற்ற அறிவுரைகள் வழங்குவர். அந்த வகையில் கர்ப்பிணிகள் வெளியில் வரக் கூடாது. வீட்டில் சமையல் செய்யக் கூடாது. கிரகணத்திற்கு முன்பே சாப்பிட்டு விட வேண்டும்.

கிரகண நம்பிக்கைகள்

கிரகணம் முடிந்ததும் குளித்து விட்டு தான் அடுத்த வேலைகளை செய்ய வேண்டும். இவற்றை இந்தியாவில் பலரும் தீவிரமாக கடைபிடித்து வருவதை பார்க்கலாம். ஆனால் நிங்கலூ சூரிய கிரகணம் ஆஸ்திரேலியாவில் மட்டும் தெளிவாக தெரிந்ததால் அங்குள்ள மக்கள் என்ன மாதிரியான பழக்கங்கள் பின்பற்றுகிறார்கள் என்பது தெரியவில்லை.

அடுத்து சந்திர கிரகணம்

அடுத்ததாக வரும் மே 5ஆம் தேதி பெனும்பிரல் சந்திர கிரகணம் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அதாவது, சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும். அப்போது பகுதி சந்திர கிரகணமாக தோன்றும். இதனை இந்தியாவில் காண முடியாது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.