ஜம்மு காஷ்மீர் : ஜம்மு – காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு வீச்சு தாக்குதலில் உயிரிழந்த 5 ராணுவ வீரர்களின் பெயர்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பூஞ்ச் மாவட்டத்தில் ஏராளமான ராணுவ முகாம்கள் அமைந்துள்ளன. அங்கிருந்து ராணுவ வீரர்கள் வாகனங்களில் தினசரி எல்லைப் பாதுகாப்பு பணிக்கு சென்று வருவது வழக்கம். நேற்று ராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்று ரஜோரி-பூஞ்ச் தேசிய நெடுஞ்சாலையில் பிம்பர் காலி பகுதியில் இருந்து சாங்கியோட் நோக்கி சென்றுகொண்டிருந்தது.
அபோது அப்பகுதியில் தீவிரவாதிகள், ராணுவ வாகனத்தின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதோடு கையெறி குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், இந்திய ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் தீப்பிடித்து எரிந்தது.
இதில், ராணுவ வாகனத்தில் இருந்த ராஷ்ட்ரிய ரைஃபிள் பிரிவைச் சேர்ந்த 5 வீரர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ரஜோரி ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தாக்குதல் தொடர்பான தகவல் அறிந்ததும் ராஷ்ட்ரிய ரைபிள் படையை சேர்ந்த ஏராளமானோர் அங்கு குவிக்கப்பட்டனர்.

தீவிரவாத தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் காஷ்மீரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர்களை ராணுவம் வெளியிட்டுள்ளது.
உயிரிழந்த வீரர்கள் ஹவில்தார் மன்தீப் சிங், லேன்ஸ் நாயக் தெபாசிஷ் பஸ்வால், லேன்ஸ் நாயக் குல்வந்த் சிங், சிப்பாய் ஹர்கிருஷ்ணன் சிங், சிப்பாய் சேவாக் சிங் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ராணுவத்தின் ராஷ்ட்ரீய ரைஃபில்ஸ் படைப் பிரிவின் 16வது கார்ப்பைச் சேர்ந்தவர்களாவர்.
இது தொடர்பாக இந்திய ராணுவத்தில் 16வது கார்ப்ஸின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கமான ஒயிட்நைட் கார்ப்ஸ், “உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம். அவர்களின் குடும்பத்தினருடன் நாங்கள் தோளாடு தோளாடு நிற்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
நக்ரோடாவில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இவர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இவர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மறைவுக்கு இந்திய ராணுவத்தினர், பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.