\"மேல பாஸ் இருக்கும் போது.. இவர் யாருங்க..\" அண்ணாமலை குறித்து கேட்டதும்.. டென்ஷனாகி சீறிய எடப்பாடி

சென்னை: அதிமுகவுக்கும் பாஜக மாநிலத் தலைமைக்கும் இடையே மோதல் தொடரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி இப்போது நேரடியாக அண்ணாமலையை விமர்சித்துப் பேசியுள்ளார்.

அதிமுகவும் பாஜகவும் கடந்த சில ஆண்டுகளாகவே ஒரே கூட்டணியில் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. இடையில் சலசலப்புகள் வந்தாலும் இந்தக் கூட்டணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அதேநேரம் கடந்த சில காலமாகவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுக தலைவர்களுக்கும் இடையே வார்த்தை மோதல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

கூட்டணி: சமீபத்தில் அண்ணாமலை திமுக தலைவர்களின் சொத்து பட்டியல் என்று ஒன்றை வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை விரைவில் தமிழ்நாட்டை ஆண்ட அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிட உள்ளதாகத் தெரிவித்தார். இது அதிமுக தலைவர்கள் மத்தியில் கோபத்தைக் கிளப்பியது. பல அதிமுக தலைவர்களும் இதற்குக் கடுமையாக எதிர்வினையாற்றினர்.

குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே இந்த விவகாரத்தில் கடுமையான கருத்துகளைத் தெரிவித்தார். அண்ணாமலை குறித்து எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாம் எனச் சீறினார். இதற்கிடையே இன்றைய தினம் மதுரை சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பாஜக உடன் கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கு, “பாஜக கூட்டணி தொடர்கிறது” என்று எடப்பாடி தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி: மேலும், அண்ணாமலை குறித்த கேள்விக்குப் பதிலளித்த எடப்பாடி, “நாங்கள் தெளிவாகச் சொல்லிவிட்டோம். அவரை பற்றிக் கேட்க வேண்டாம் என்று மிகத் தெளிவாகவே சொல்லிவிட்டோம். கூட்டணியை நிர்ணயம் செய்யக் கூடியவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள். பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் நட்டா ஆகியோர் தான் இதில் முடிவெடுப்பார்கள்.. நாங்கள் தான் அவரை பற்றி எந்தவொரு கேள்வியும் கேட்க வேண்டாம் எனச் சொல்லிவிட்டோமே..

மேலே பாஸ் (Boss) இருக்கும் போது கீழே இருப்பவர்கள் குறித்து எதற்குப் பேச்சு. கீழே இருப்பவர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள் முன்பு தமிழிசை இருந்தார்கள், அடுத்து எல் முருகன் வந்தார்கள். இப்படி மாறிக் கொண்டே இருப்பார்கள். அது குறித்து எல்லாம் எங்களுக்குக் கவலை இல்லை. எங்களைப் பொறுத்தவரைக் கூட்டணி என்றால் பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா ஆகியோர் தான் முடிவு செய்வார்கள்.

 Modi is Boss for BJP dont speak about Annamalai says ADMK Edappadi Palanisamy

2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டசபை தேர்தல் சமயங்களில் கூட்டணி பேச்சுவார்த்தை அப்படித்தான் நடந்தது. இங்குள்ள மாநில தலைவர்களிடம் எல்லாம் யாரும் பேசவில்லை” என்றார். மேலும், அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் மேலும் சில கேள்விகளைக் கேட்க முயன்ற போது, அண்ணாமலை குறித்து எந்தவொரு கேள்வியையும் கேட்க வேண்டாம் எனத் திட்டவட்டமாக எனப் பதில் சொல்ல மறுத்துவிட்டார்.

தொடர்ந்து தொண்டருக்கு என்ன சொல்ல வேண்டும் என்ற கேள்விக்கு, “நானே தொண்டர் தான். எந்தக் காலத்திலும் நான் தலைவர் என்று சொன்னது இல்லை. தொண்டர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து, மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை நனவாக்கும் வகையில் அதிமுக ஆட்சியைக் கொண்டு வருவோம்” என்று அவர் தெரிவித்தார். அதிமுகவுக்கும் பாஜக மாநிலத் தலைமைக்கும் இடையே மோதல் தொடரும் நிலையில், எடப்பாடி நேரடியாக இப்போது அண்ணாமலையை விமர்சித்துப் பேசியுள்ளார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.