புதுடில்லி :துாத்துக்குடி தி.மு.க., – எம்.பி., கனிமொழியின் தேர்தல் வெற்றி தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், தமிழகத்தின் துாத்துக்குடி தொகுதி யில் தி.மு.க., சார்பில் கனிமொழி போட்டியிட்டு வென்றார்.
இவரது தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி, சந்தானகுமார் என்ற வாக்காளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
‘தேர்தலில் போட்டியிட கனிமொழி தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவரது கணவர் அரவிந்தனின், ‘பான் கார்டு’ எனப்படும், நிரந்தர வருமான வரி கணக்கு எண் குறிப்பிடப்படவில்லை’ என, மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
சென்னை உயர் நீதிமன்றம் இந்த மனுவை விசாரித்து வந்த நிலையில், அதை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி தரப்பில் கோரப்பட்டது. ஆனால், அந்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கனிமொழி தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பீலா எம்.திரிவேதி அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கனிமொழி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிட்டதாவது:
கனிமொழியின் வேட்பு மனு முறையாக இல்லை என்பதை நிரூபிக்க மனுதாரர் தரப்பில் ஒரு உருப்படியான ஆதாரம் கூட சமர்ப்பிக்கப்படவில்லை.
கனிமொழியின் கணவர் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர். அவர் இங்கு வருமான வரி செலுத்துவதில்லை. எனவே, அவருக்கு நிரந்தர வருமான வரி கணக்கு எண் இல்லை என்பதை கனிமொழி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அவர் வாதிட்டார்.
வழக்கு விசாரணையில் இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement