2.5 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள்; கர்நாடகாவில் ராகுலின் கடைசி நேர அஸ்திரம்!

கர்நாடகாவில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி இறுதிகட்ட பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. நாளை மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. 113 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சியை பிடிக்கும். எனவே எப்படியாவது ஆட்சி கட்டிலில் அமர்ந்துவிட வேண்டும் என்று
காங்கிரஸ்
மும்முரமாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகளும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருக்கின்றன.

கர்நாடக தேர்தல் 2023

இருப்பினும் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி தேர்தலில் கடும் போட்டியை அளிக்க பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் வியூகம் வகுத்துள்ளன. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் மிகுந்த கவனம் பெற்றுள்ளன. அதில், இல்லத்தரசிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்,

காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள்

KSRTC மற்றும் BMTC பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்து பயண வசதி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் 3,000 ரூபாய், பழைய ஓய்வூதிய திட்டம், அரசு காலி பணியிடங்களை விரைவாக நிரப்புதல், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம், மாநில கல்விக் கொள்கை உள்ளிட்டவை முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்நிலையில் பெலகாவியில் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

ராகுல் காந்தி பிரச்சாரம்

சிக்கோடி – சடலாகா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கணேஷ் ஹக்கேரி, யமகன்மர்டி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சதிஷ் ஜர்கிஹோலி ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது பேசுகையில், கர்நாடக மாநிலத்தில் காலியாகவுள்ள 2.5 லட்சம் பணியிடங்கள் இரண்டு ஆண்டுகளில் நிரப்பப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

மவுனம் காக்கும் பிரதமர் மோடி

மாநில விவசாயிகளுக்காக 1.5 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும். பால் பண்ணை விவசாயிகளுக்கு 7 ரூபாய் வீதம் மானியம் வழங்கப்படும் என்று வாக்குறுதிகளை அளித்தார். மேலும் பேசும் போது, ஆளும் பாஜக அரசிற்கு எதிராக 40 சதவீத கமிஷன் விவகாரம் குறித்து மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கம் பல்வேறு புகார்களை முன்வைத்தது. ஆனால் பிரதமர் மோடி ஏன் மவுனம் காக்கிறார். மற்ற விஷயங்களை பேசுவதற்கு பதிலாக கமிஷன் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில மக்களுக்கு விளக்கம் கொடுக்கலாமே?

பாஜக ஊழல்வாதிகள்

விசாரணை எந்த அளவிற்கு நடந்துள்ளது. எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் போன்ற விவரங்களை அளித்தால் நன்றாக இருக்கும். ஒரு விஷயத்தை கவனித்தீர்களா? தேர்தல் பிரச்சாரத்தில் தனது கட்சி தலைவர்களின் பெயர்களை சுட்டிக் காட்டி பேச பிரதமர் மோடி தயங்குகிறார். அப்படியெனில் அவர்கள் மிகப்பெரிய ஊழல்வாதிகள் என்பதால் தானே? என்று ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.