காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், இதய பாதிப்புகளுக்கான அறிகுறிகள் உடன் கடந்த 15, ஜூன் 2023 அன்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி முதன்மை மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்படுகிறார். அவரை மூத்த இதய சிகிச்சை நிபுணர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையிலான மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து உரிய சிகிச்சை அளித்து வருகிறது. இவர்கள் விரைவாக பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து மேலும் பல பரிசோதனைகள் செய்து அறுவை சிகிச்சைக்கு உடல்நிலை தயாராக இருக்கிறதா? என உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதன் முடிவுகளுக்கு ஏற்ப அறுவை சிகிச்சை எப்போது செய்யப்படும் என்பது தீர்மானிக்கப்படும். தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது இதயச் செயல்பாடுகள் பல்துறை மருத்துவ நிபுணர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்ட குழுவினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ அறிக்கையை காவேரி மருத்துவமனை துணை நிறுவனரும், செயல் இயக்குநருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
