Ram Charan – டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் உபாசனா.. குழந்தையுடன் ஜாலியாக வந்த ராம்சரண்

ஹைதராபாத்: Ram Charan (ராம் சரண்) ராம் சரணின் மனைவி உபாசனா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.இதனையடுத்து ராம் சரண் தனது குழந்தையை ஏந்தி வரும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் மெகா ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரணும் தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார். சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் அவர் இந்திய அளவில் மிகச்சிறப்பாக நடனம் ஆடக்கூடியவர்களில் ஒருவராகவும் இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக ஆர்.ஆர்.ஆர் படம் வெளியானது. படம் மெகா ஹிட்டானது. மேலும் இவர் நடனம் ஆடிய நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கரையும் வென்றது.

குடும்பம்: ராம் சரண் உபாசனா என்பவரை கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ராம் சரணும், உபாசனாவும் அன்யோன்யமாக இத்தனை வருடங்கள் ஒன்றாக இருந்துவருகின்றனர். இருப்பினும் அவர்களுக்கு குழந்தை இல்லாதது மட்டும் ஒரு குறையாக இருந்தது. இந்தச் சூழலில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தாள். 11 ஆண்டுகள் கழித்து வாரிசு வந்திருப்பதால் சிரஞ்சீவி குடும்பமே மகிழ்ச்சி கடலில் இருக்கிறது.

குவிந்த வாழ்த்து: சிரஞ்சீவி குடும்பத்துக்கு ராம் சரண் மூலமாக ஒரு வாரிசு வந்ததை அடுத்து அல்லு அர்ஜுன், பவன் கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர், நிஹாரிகா உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்தை ராம் சரண் – உபாசனா தம்பதிக்கு தெரிவித்தனர். ரசிகர்களும் தங்களது வாழ்த்தினை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்தனர். அதுமட்டுமின்றி அந்தப் பெண் குழந்தை சிறப்பாக வாழ்வதற்கு இறைவனையும் அவர்கள் பிரார்த்திப்பதாக தெரிவித்திருந்தனர்.

குஷியில் சிரஞ்சீவி: தாத்தாவானதால் எல்லோரையும்விட சிரஞ்சீவி உச்சக்கட்ட சந்தோஷத்தில் இருக்கிறார். தான் தாத்தாவானது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” பல ஆண்டுகளுக்குப் பிறகு எங்களது வேண்டுகோளை இறைவன் நிறைவேற்றி வைத்திருக்கிறார். ராம் சரண் தந்தையானதும் எங்கள் நண்பர்களிடமிருந்தும், உலகெங்கிலும் உள்ள அவருடைய ரசிகர்கள், நலம் விரும்பிகள் என அனைவரும் அன்பையும், வாழ்த்தையும் பொழிந்துவருகிறார்கள். எங்களின் மகிழ்ச்சியை தங்களுடையதாக உணர்கிறார்கள். அவர்கள் வாழ்த்தியதற்கும், அன்பை பகிர்ந்து கொண்டதற்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினார்.

உபாசனா டிஸ்சார்ஜ்: இந்நிலையில் உபாசனா எப்போது டிஸ்சார்ஸ் ஆவார் என்ற எதிர்பார்ப்பு சிரஞ்சீவி குடும்பத்தாரிடம் இருந்தது. தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதன் காரணமாக மூன்று நாட்களுக்கு பிறகு இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார். இதனையடுத்து மருத்துவமனையிலிருந்து தனது மனைவி உபாசனாவுடன் கையில் குழந்தையை ஏந்தியபடி ராம் சரண் வந்தார்.அந்தப் புகைப்படம் இப்போது இணையத்தில் படு ட்ரெண்டாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.