அரிய வகை நோயால் 36 ஆண்டுகளாக இரட்டை குழந்தைகளை வயிற்றில் சுமந்த தொழிலாளி

பலூன் வயிறுடன் வாழ்ந்த தொழிலாளி

மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் சஞ்சு பகத். 1963-ம் ஆண்டு பிறந்த இவருக்கு சிறுவயதில் இருந்தே வயிறு பெரிதாக காணப்பட்டது. எனினும் அவர் ஆரோக்கியமாக இருந்தார். 20 வயது வரை அவர் பெரிய வயிறை பற்றி கவலைப்படவில்லை. அவர் வீட்டருகே உள்ள பண்ணையில் வேலை செய்து வந்தார். நாட்கள் செல்ல, செல்ல அவரது வயிறு பெரிதாகி கொண்டே பலூன் மாதிரி மாறியது. எனினும் சஞ்சு பகத் அதை பற்றி கவலைப்படாமல் வேலை பார்த்து வந்தார்.

சஞ்சு பகத்தை அவரது நண்பர்களும், தெரிந்தவர்கள் அக்கம், பக்கத்தை சேர்ந்தவர்களும் ‘கர்ப்பிணி’ என கிண்டல் செய்து வந்தனர். இது அவரது குடும்பத்தினருக்கு கவலையை ஏற்படுத்தியது. ஒருகட்டத்தில் வயிறு வீக்கம் காரணமாக அவருக்கு சுவாச பிரச்சினை ஏற்பட்டது.

அரிய வகை நோய்

இதையடுத்து அவர் மும்பையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தார். டாக்டர் அஜய் மேத்தா முதலில் சஞ்சு பகத்துக்கு வயிற்றுக்குள் கட்டி இருக்கலாம் என நினைத்தார். அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்றி எடுக்க முடிவு செய்தார். அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் கை, கால்கள் போன்ற உறுப்புகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து நடந்த ஆய்வில் சஞ்சு பகத் அரிதிலும் அரிதான ‘கருவில் கரு’ என்ற நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அவர் 36 ஆண்டுகளாக இரட்டை குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டு இருந்தது தெரியவந்தது.

இந்த வகை நோய் பாதிப்பில் பிறக்காத இரட்டை குழந்தை உடலில் ஒட்டுண்ணி போல வாழ்ந்துள்ளது. டாக்டர்கள் சஞ்சு பகத் வயிற்றில் வளர்ந்த இரட்டை குழந்தைகளை அகற்றினர். சஞ்சு பகத் அந்த குழந்தைகளை பார்க்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.