புதிய தலைமைச் செயலாளருக்கு புது 'அசைன்மெண்ட்'.. ஸ்டாலின் அதிரடி மூவ்.. அதிரும் "கோட்டை"

சென்னை:
தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்பது ஓரிரு தினங்களில் தெரியவந்துவிடும் சூழலில், அவருக்காக மிகப்பெரிய அசைன்மெண்ட் ஒன்று காத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் தகவலாக உள்ளது. மேலும், இந்த அசைன்மெண்ட்டை கச்சிதமாக செய்து முடிக்கும் திறமைக் கொண்ட அதிகாரியை தான், அடுத்த தலைமைச் செயலாளராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யவுள்ளார் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு தலைமைச் செயலாளராக பணியாற்றி வரும் இறையன்பு ஐஏஎஸ் பதவிக்காலம் வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் அடுத்த தலைமைச் செயலாளரை தேர்வு செய்யும் பணியில் முதல்வர் ஸ்டாலின் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

புதிய தலைமைச் செயலாளருக்கான ரேஸில் 23 ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். இதில் ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்.கே.பிரபாகர், சிவதாஸ் மீனா ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர்களில் ஒருவர்தான் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய தலைமைச் செயலாளர்:
இந்நிலையில், புதிதாக வரவுள்ள தலைமைச் செயலாளருக்கு சில தகுதிகளும், அபாரத் திறமைகளும் இருக்க வேண்டும் என ஸ்டாலின் எதிர்பார்க்கிறாராம். அதில் முக்கியமான தகுதி, டெல்லியை சமாளிக்கும் திறமை என முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாகவே, தலைமைச் செயலாளர் தேர்வு என்பது மற்ற துறைகளில் செயலாளர்களை நியமிப்பது போல சட்டென முடிவு செய்வது கிடையாது. சீனியாரிட்டி எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு நிர்வாகத் திறமை உள்ள அதிகாரிகள் தான் தலைமைச் செயலாளர் பதவிக்கு வர முடியும்.

ஸ்டாலின் உறுதி:
மொழி ஆளுமை, நிர்வாகத் திறமை, மத்திய அரசிடம் வலுவான தொடர்பு, அதிகாரிகளிடம் வேலை வாங்கும் திறன், மத்தியில் உள்ள ஆட்சியாளர்களை பகைக்கவும் செய்யாமல் அதே நேரத்தில் பணிந்தும் போகாமல் இருக்கக்கூடிய பெர்சனாலிட்டி ஆகிய திறமைகள் தலைமைச் செயலாளருக்கு இருக்க வேண்டும். குறிப்பாக, ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படக்கூடிய சமயங்களில் அதை தீர்த்து வைக்கும் திறமை தலைமைச் செயலாளருக்கு மிக அவசியம். எனவே, இந்த திறமைகள் இருக்கும் அதிகாரியை தான் தலைமைச் செயலாளர் பதவியில் அமர்த்த வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.

டெல்லி நெருக்கடி:
இதுபோன்ற அதிகாரிகளை அடையாளம் காண்பதில் மறைந்த முதல்வர் கருணாநிதி கைத்தேர்ந்தவர். அதுமட்டுமல்லாமல், முரசொலி மாறன் என்ற மிகப்பெரிய ஆளுமை கருணாநிதிக்கு இருந்தார். ஒரே நேரத்தில் மாநிலத்திலும், டெல்லியிலும் அரசியல் செய்யும் திறமை அவருக்கு இருந்தது. ஆனால், அதுபோன்ற ஒருவர் ஸ்டாலினுக்கு இல்லை. இப்போது திமுக ஆட்சிக்கு பல விதங்களில் பாஜக அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது.

முக்கிய அசைன்மெண்ட்:
இந்த நெருக்கடியை சமாளிக்கக் கூடிய, டெல்லி ஆட்சியாளர்களிடம் சுமூகமாக பேசி தீர்க்கக்கூடிய சரியான அரசியல்வாதியும், அதிகாரியும் தன்னிடம் இல்லை என்பதே சமீபத்திய நிகழ்வுகளில் இருந்து ஸ்டாலின் உணர்ந்து கொண்டார். எனவே தமிழக அரசியல் தெரிந்திருப்பதுடன், டெல்லியில் லாபி செய்யக்கூடிய திறமை இருக்கும் அதிகாரியைதான், அடுத்த தலைமைச் செயலாளர் நாற்காலியில் ஸ்டாலின் அமர்த்துவார் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தமிழகத்தில் பாஜகவின் அடுத்த நகர்வுகள், திமுகவுக்கு கொடுக்கப் போகும் நெருக்கடிகளை உடனுக்குடன் முதல்வருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதுதான் புதிய தலைமைச் செயலாளருக்கு ஸ்டாலின் கொடுக்கப் போகும் முக்கிய அசைன்மெண்ட் எனவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.