
அதிகம் டார்கெட் செய்யப்படும் நபர் நான் தான் : மம்முட்டி முன்பாக நடிகர் திலீப் வேதனை
மலையாள திரை உலகில் மோகன்லால், மம்முட்டிக்கு அடுத்ததாக மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் நடிகர் திலீப். அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்கும் விதமான படங்களை தந்து வரும் நடிகர் திலீப், சில வருடங்களாகவே பெர்சனல் ஆகவும் திரை உலகிலும் கடுமையான காலகட்டத்தில் இருந்து வருகிறார்.
குறிப்பாக நடிகை ஒருவரின் கடத்தல் வழக்கில் சிக்கி சிறை சென்று ஜாமீனில் வெளிவந்து ஒரு பக்கம் வழக்கு விசாரணையை சந்தித்துக் கொண்டே திரைப்படங்கலிலும் நடித்து வருகிறார் திலீப். அந்த வகையில் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பிறகு தற்போது அவர் நடித்துள்ள வாய்ஸ் ஆப் சத்தியநாதன் என்கிற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பிரபல இயக்குனரும் திலீப்பின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருப்பவருமான ரபி (மெக்கார்டின்) இயக்கியுள்ள இந்த படம் வரும் ஜூலை 14ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது
இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் மம்முட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டிரைலரை வெளியிட்டார். இந்த நிகழ்வில் நடிகர் திலீப் பேசும்போது, “இந்திய திரையுலகிலேயே அதிகம் குறி வைத்து டார்கெட் செய்யப்பட்ட நபர் நானாகத்தான் இருப்பேன். என்னுடைய படங்கள் எப்போதுமே தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றன. என்னுடைய படங்கள் வெளியாவதற்கு முன்பாகவே அதற்கான விமர்சனங்கள் வெளியிடப்படுகின்றன. இருந்தாலும் என்னை, என்னுடைய படங்களை நேசிப்பவர்கள் தியேட்டர்களுக்கு சென்று தான் படம் பார்ப்பார்கள் என நம்புகிறேன். நீங்கள் தான் என்னுடைய பலம்” என்று தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தி உள்ளார் திலீப்.