உண்ணி செடிகள் மூலம் யானை சிலைகள்… தமிழக பழங்குடியின இளைஞர்களுக்கு விருது வழங்கிய மன்னர் சார்லஸ்!

இந்தியாவில் இயங்கி வரும் ரியல் எலிபெண்ட் கலெக்டிவ் என்ற தன்னார்வ நிறுவனம், இங்கிலாந்தின் எலிபெண்ட் பேமிலி நிறுவனத்துடன் இணைந்து நீலகிரி மலைப்பகுதியில் காணப்படும் லந்தானா கேமரா என்ற உண்ணி செடியின் மூலம் யானை சிலைகளை உருவாக்கி வருகிறது.

இந்த யானைகளின் சிலைகளை உருவாக்க நீலகிரியில் உள்ள பெட்டா குரும்பா பழங்குடி சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு அவர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். அவர்களால் லந்தானா யானை சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வனத்தை சார்ந்துள்ள சமூகங்களுக்கு வாழ்வாதாரமும் அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் லந்தானா யானை சிலைகளை உருவாக்கும் கைவினை கலைஞர்களின் பிரதிநிதிகளாக நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த பழங்குடியின இளைஞர்களான ரமேஷ் மாறன் மற்றும் விஷ்ணு வர்தன் என்ற இரண்டு இளைஞர்களுக்கு பிரிட்டனின் மார்க் ஷண்ட் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதை மன்னர் இரண்டாம் சார்லஸ் ராணி கமிலாவும் வழங்கினர். மேலும் இந்த விழாவில் ஆஸ்கார் விருது பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படத்தை இயக்கிய நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பெண் இயக்குனரான கார்த்திகி கொன்சால்வஸ் ‘தாரா’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். அவருக்கு யானை சிலையும் வழங்கப்பட்டது.

இங்கிலாந்து ராணி கமிலாவின் சகோதரரும், மறைந்த வன பாதுகாவலருமான மார்க் ஷண்டால் எலிபெண்ட் பேமிலி என்ற சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் ஆசிய காடுகளில் யானைகளை பாதுகாக்கும் பணிகளை செய்து வருகிறது.

இந்த நிறுவனம் ஆண்டுதோறும் ஆசிய காடுகளில் வனவிலங்குகள் மற்றும் காடுகளை பாதுகாப்பதில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.