தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும்

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டலசுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைகாற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று(ஜூலை 3) தமிழகம், புதுச்சேரியில்பெரும்பாலான இடங்களிலும், வரும் 4, 5, 6-ம் தேதிகளில் சிலஇடங்களிலும், இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதேபோல, இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

வரும் 4-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

வரும் 5-ம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

வரும் 6-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

புதுச்சேரியில் 4 செ.மீ: ஜூலை 2-ம் தேதி (நேற்று) காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுச்சேரி, தேவாலாவில் 4 செ.மீ., நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 3 செ.மீ., விருதுநகர், விழுப்புரம் மாவட்டம் வானூர், வளத்தி, வல்லம், காஞ்சிபுரம், நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தை, மேல் கூடலூர், நடுவட்டம், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர், கோவை மாவட்டம் சிறுவாணி அடிவாரம் ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 – 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.