புதுடெல்லி: உச்ச நீதிமன்றம் கோடை விடுமுறைக்குப் பிறகு அனைத்து அமர்வுகளுடன் நேற்று மீண்டும் முழு அளவில் செயல்படத் தொடங்கியது.
இந்நிலையில், 1 முதல் 5 வரையிலான நீதிமன்ற அறைகளில் இலவச வை-பை வசதி வழங்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதிடி.ஒய்.சந்திரசூட் நேற்று அறிவித்தார். இதுபோல நீதிமன்ற அறைகளில் இனி புத்தகங்கள் அல்லது காகிதங்கள் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். அதேநேரம், புத்தகங்கள் மற்றும் காகிதங்களை நம்பி இருக்கக் கூடாது என்பது அர்த்தமல்ல என்றும் அவர் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற அறைகளில் கூடுதல் டிஜிட்டல் திரைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வீடியோ கான்பரன்ஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் நீதிமன்ற அறைகள் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கின்றன.
இப்போதைக்கு தலைமை நீதிபதி அறை மற்றும் 2 முதல் 5 வரையிலான நீதிமன்ற அறைகள், காத்திருக்கும் அறைகள், ஊடகவியலாளர் அறை 1, 2 ஆகியவற்றில் வை-பை வசதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நீதிமன்ற அறைகளுக்கு படிப்படியாக வை-பை வசதி வழங்கப்படும் என தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.