கொந்தளித்த மா.சுப்பிரமணியன்.. "நீங்க என்ன டாக்டரா..?" இப்படியெல்லாம் கேள்வி கேக்குறீங்க..

சென்னை:
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நிருபர் கேட்ட கேள்வியால் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆவேசமடைந்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் – அஜிஷா தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை சில தினங்களுக்கு முன்பு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. தலையில் ரத்தக்கசிவு ஏற்படுவது தொடர்பான பிரச்சினை அந்தக் குழந்தைக்கு இருந்ததால், கையில் டிரிப்ஸ் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அந்தக் குழந்தையின் கை அழுகத் தொடங்கியது.

அப்போது இதுதொடர்பாக அக்குழந்தையின் பெற்றோர் மருத்துவர்களிடம் தெரிவத்தும், அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, சில நாட்களில் அந்தக் குழந்தையின் கை முழுவதுமாக அழுகியதால் அதை மருத்துவர்கள் அகற்றினர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவர்களின் அலட்சியத்தால் தான், தங்கள் குழந்தைக்கு இந்த துயரம் நேர்ந்ததாக அதன் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு நிருபர், “மருத்துவர்களுக்கு பதிலாக நர்சுகள்தான் குழந்தைக்கு டிரிப்ஸ் ஏற்றியதாக அதன் பெற்றோர்கள் சொல்கிறார்களே..” என்று கேள்வியெழுப்பினார்.

இந்தக் கேள்வியால் ஆவேசம் அடைந்த மா. சுப்பிரமணியன், “அந்தக் குழந்தையை ஒன்றரை வயது வரை காப்பாற்றியதே பெரிய மருத்துவ சாதனை. முதலில் அந்தக் குழந்தையை பார்த்துட்டு வாங்க. ஏன் இங்கேயே நிக்கிறீங்க. முதலில் போய் பார்த்துட்டு வாங்க. நான் இங்கேயே இருக்கிறேன். வீம்புக்கு கேள்வி கேக்காதீங்க. உங்களுக்கு தெரிந்த மருத்துவரை கூட்டிட்டு வாங்க. நீங்க என்ன டாக்டரா.. இப்படியெல்லாம் கேள்வி கேக்குறீங்க” எனக் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.