Prabhas – என்னது மறுபடியும் முதல்லேர்ந்தா?.. ஆதிபுருஷ் இயக்குநரிடமிருந்து ஓட்டம் எடுத்த பிரபாஸ்?

ஹைதராபாத்: Prabhas (பிரபாஸ்) ஆதிபுருஷ் படத்தின் இயக்குநர் ஓம் ராவத் நடிகர் பிரபாஸிடம் அடுத்த படம் குறித்து பேசியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஓம் ராவத் இயக்கத்தில் கடந்த 16ஆம் தேதி வெளியானது ஆதிபுருஷ் படம். பாகுபலி புகழ் பிரபாஸ், பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான்,கீர்த்தி சனோனி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதில் பிரபாஸ் ராமராகவும், சைஃப் அலிகான் ராவணனாகவும், கீர்த்தி சனோனி சீதையாகவும் நடிக்க மொத்தம் ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் படம் வெளியானது.

நெகட்டிவ் விமர்சனம்: ராமாயணத்தை அடிப்படையாக வைத்து படம் உருவாக்கப்பட்ட படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு சென்றனர். ஆனால் படம் அவர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. கிராஃபிக்ஸ் காட்சிகளோ கார்ட்டூன் காட்சிகள் போல் இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்தனர். ஓரிரு இடங்களில் பின்னணி இசை மட்டுமே ஆறுதல் அளிக்கிறது என்றும் பிரபாஸ் பார்ப்பதற்கு ராமர் போல இல்லை இயேசுநாதர் போல இருக்கிறார் என கூறி மீம்ஸ்களையும் பறக்கவிட்டனர்.

வசூலிலும் டல்: படத்துக்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனம் காரணமாக படத்தின் வசூல் மொத்தமாக படுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 600 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்த ஆதிபுருஷ்ஷின் வசூலும் பெரிய அளவில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. எனவே டிக்கெட் விலையையும் குறைத்து 112 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் என படக்குழு அறிவிக்கும் அளவுக்கு நிலைமை சென்றது குறிப்பிடத்தக்கது.

வலுத்த எதிர்ப்பு: வசூல், நெகட்டிவ் விமர்சனம் என அடிவாங்கிய ஆதிபுருஷுக்கு எதிர்ப்பும் வலுத்தது. படத்தில் இடம்பெற்றிருந்த சீதை தொடர்பான வசனம், அனுமன் ராவணன் பற்றி பேசும் வசனம் போன்றவைகளுக்கு எதிர்ப்புகள் எழுந்தன. மேலும் திரைப்பட தொழிலாளர் சங்கமோ படத்தை தடை செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமும் சமீபத்தில் எழுதியது.

நேபாளத்திலோ படத்துக்கு தடையும் விதிக்கப்பட்டுவிட்டது. ஆதிபுருஷ் படத்துக்கு மட்டுமின்றி அனைத்து இந்தி படங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆதிபுருஷ் டீமை 50 டிகிரி செல்சியஸில் எரிக்க வேண்டும் என சக்திமான் நாடகத்தில் நடித்த நடிகர் முகேஷ் கண்ணா தெரிவித்திருந்தார்.

அடுத்த படம்: இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தின் இயக்குநர் ஓம் ராவத் சமீபத்தில் பிரபாஸை சந்தித்ததாக தகவல் வெளியானது. அதன்படி மீண்டும் ஒரு படம் இணைந்து செய்யலாம் என ஓம் ராவத் கேட்டதாகவும் அதற்கு பிரபாஸ் தீவிரமாக மறுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஆதிபுருஷ் இவ்வளவு பெரிய அடிவாங்கும் என பிரபாஸ் நினைக்கவில்லை. குறிப்பாக படக்காட்சிகளும், தானும் ட்ரோல் செய்யப்படுவோம் என அவர் எதிர்பார்க்கவே இல்லை. அதனால்தான் மற்றொருமுறை ஓம் ராவத்துடன் இணைய அவர் விரும்பவில்லை என தெலுங்கு திரையுலக வட்டாரம் தெரிவிக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.