வெள்ளத்தில் சிக்கிய 2,000 மாணவர்கள்… பஞ்சாபில் ஓடிவந்த ராணுவம்… வரும் 16ஆம் தேதி வரை விடுமுறை!

ஜம்மு காஷ்மீர், லடாக், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மழை வெள்ள பாதிப்புகளில் சிக்கி 28 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. மேலும் ராஜ்புராவில் உள்ள சிட்காரா பல்கலைக்கழகத்தில் வெள்ளம் புகுந்துள்ளது.

சட்லஜ் – யமுனா இணைப்பு கால்வாய்

அதாவது, சட்லஜ் – யமுனா இணைப்பு கால்வாயில் (SYL Breach) ஏற்பட்ட உடைப்பு காரணமாக சுற்றுவட்டாரப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. அதில் கார்ஹி கிராமம் மற்றும் சிட்காரா பல்கலைக்கழகம் ஆகியவையும் சிக்கிக் கொண்டன. இதில் சுமார் 2,000 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இவர்கள் வெளியேற முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் நேற்று இரவு மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

சிட்காரா பல்கலைக்கழக மாணவர்கள்

இந்நிலையில் கிராம மக்களையும், பல்கலைக்கழகத்தில் தங்கியுள்ள மாணவர்களையும் மீட்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்காக இந்திய ராணுவத்தின் உதவியை நாடியுள்ளனர். அவர்கள் விரைந்து வந்த மீட்பு பணிகளை சற்றுமுன் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்கலைக்கழகத்திற்கு எதிரே உள்ள தனியார் மருத்துவமனையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

வரும் 16ஆம் தேதி வரை மூடல்

இந்நிலையில் அங்கிருந்த நோயாளிகள் அரசு ராஜிந்திரா மருத்துவமனையில் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கிடையில் மழை, வெள்ளம் காரணமாக சிட்காரா பல்கலைக்கழகத்திற்கு வரும் 16ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதுவரை பல்கலைக்கழக வளாகம் மூடப்பட்டிருக்கும் என அறிவித்துள்ளனர். இதுதவிர பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

எல்லையோர மாவட்டங்களில் மழை

இதையடுத்து பெரோஸ்பூர், பலிகா ஆகிய எல்லையோர மாவட்டங்களில் பலத்த மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இவற்றை ஒட்டி சட்லஜ் ஆறு பாய்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

சட்லஜ் ஆற்றில் வெள்ளம்

எனவே வெள்ள அபாய எச்சரிக்கையை ஒட்டி, சட்லஜ் ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மழையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல் வயல்களில் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் பெரும் சேதத்தை சந்தித்துள்ளனர்.

பீஸ் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

இத்தகைய சூழலை மொகாலியில் பார்க்க முடிகிறது. மேலும் பாங் அணையில் இருந்து பீஸ் ஆற்று நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் நீர் வெளியேற்றம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதன் கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.