சென்னை: சன் டிவியில் பல ஆண்டுகள் “சொல்லுங்கண்ணே.. சொல்லுங்க” நிகழ்ச்சியை நடத்தி பிரபலமானவர் இமான் அண்ணாச்சி. சிவகார்த்திகேயனின் காக்கிச்சட்டை உள்ளிட்ட சில படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்ட இமான் அண்ணாச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர். இந்நிலையில், புதிதாக படமொன்றில் நடித்துள்ள இமான் அண்ணாச்சி அதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியது பரபரப்பை கிளப்பி உள்ளது.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தை வைத்து படம் எடுத்தால் ஓடி விடுகிறது என்றும் இதையே தற்போது டிரெண்டாக ஒரு சில இயக்குநர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர் என அந்த நிகழ்ச்சியில் இமான் அண்ணாச்சி பேசி உள்ளார்.
மாரி செல்வராஜின் மாமன்னன்: கைவசம் துருவ் விக்ரம், தனுஷ் படங்களை இயக்கும் வாய்ப்புகள் இருந்த நிலையிலும், உதயநிதி ஸ்டாலின் தனது கடைசி படத்தை நீங்க இயக்க வேண்டும் என்று சொன்னதுமே மாரி செல்வராஜ் அந்த படங்களை விட்டு விட்டு மாமன்னன் படத்தை இயக்கி முடித்தார்.
இதுவரை இல்லாத அளவுக்கு உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படம் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி சாதனை படைத்தது. அதே அளவுக்கு படத்தின் மீது ஏகப்பட்ட விமர்சனங்களும் விவாதங்களும் சமூக வலைதளங்கள், அரசியல் வட்டாரங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மத்தியிலும் வெடித்தன.
பன்றி மேய்த்த உதயநிதி: தமிழ் சினிமாவில் நடிகர்கள் பலரும் நடிக்கத் தயங்கும் காட்சிகளை சர்வ சாதாரணமாக நடித்து அசத்தினார் உதயநிதி ஸ்டாலின். பன்றிகளை வளர்க்கும் காட்சியில் தான் அவரது இன்ட்ரோவே இடம்பெற்றது.
மேலும், தனது கையிலும் பன்றி டாட்டூ போட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருந்தார். அருந்ததிய மக்களின் ஓட்டுக்களை கவரவே உதயநிதி இப்படி செய்கிறார் என விமர்சனங்களும் கிளம்பின. அதே சமயம் மற்ற ஹீரோக்கள் செய்யாததை உதயநிதி பெரிய மனதுடன் செய்து சாதனை படைத்துள்ளார் என பாராட்டுக்களும் குவிந்தன.
இமான் அண்ணாச்சி தாக்கு: சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வந்த இமான் அண்ணாச்சி சில படங்களில் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்ட இவர், சமீபத்தில் பட விழா ஒன்றில் பேசும் போது இப்போதெல்லாம் சினிமா ரொம்பவே கெட்டு விட்டது. ஒரு சமூகத்தை வைத்து படம் பண்ணாலே ஹிட் அடித்து விடலாம் என்கிற நிலை உருவாகி விட்டது.

மேல் தட்டு, கீழ் தட்டுன்னு சும்மா தட்டு தட்டா வியாபாரம் பண்றாங்க, தமிழ் சினிமாவில் இப்படியொரு நிலைமை தொடர்வது சினிமா உலகுக்கு நல்லது அல்ல, இதையொரு காமெடியனாக சொல்லாமல் பொதுநலம் உள்ள மனிதனாக சொல்கிறேன் என இமான் அண்ணாச்சி பேசி உள்ளார்.
அவரது பேச்சைக் கேட்ட ரசிகர்கள், இயக்குநர் மாரி செல்வராஜைத்தான் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார் இமான் அண்ணாச்சி என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.