சங்கர் ஜிவால் – ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு: தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது?

தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக பணியாற்றிய இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் ஜூன் 30 ஆம் தேதியுடன் பணி ஓய்வுபெற்றனர். இதைத்தொடர்ந்து புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனாவும், டிஜிபியாக சங்கர் ஜிவாலும் அன்றைய தினமே பொறுப்பேற்றுக் கொண்டனர்.

தமிழக அரசின் மிக முக்கிய பதவிகளை அலங்கரித்த இருவரையும் அழைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தியுள்ளார். நேற்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவை அழைத்து பேசிய ஆளுநர், இன்று சங்கர் ஜிவாலை அழைத்து பேசியுள்ளார்.

கடந்த சில நாள்களாக டெல்லி பயணம் மேற்கொண்ட ஆர்.என்.ரவி அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என வலியுறுத்தி வரும் ஆர்.என்.ரவி அது தொடர்பாக அமித் ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வருகின்றன. ஒன்றிய அரசின் வழக்கறிஞரிடமும் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தியுள்ளார்.

காவல்துறை மன அழுத்தம் போக்குவது குறித்து டிஜிபி தலைமையில் ஆலோசனைக்கூட்டம்.

டெல்லியிலிருந்து சென்னை வந்த வேகத்தில் தலைமைச் செயலாளரையும், டிஜிபியையும் அழைத்து பேசியுள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

சங்கர் ஜிவால் உடனான இன்றைய சந்திப்பில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது, காவல் துறையினருக்கு மன அழுத்தம் இருக்கிறதா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு இறையன்பு, சைலேந்திரபாபு இருந்த போதும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை அழைத்து தனித்தனியாக ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.