ஒரு ‛கைதி'யின் டைரி : லோகேஷின் கண் பட்டு… இன்று நம் மனம் தொட்டு…!

2012ல் 'பெருமான்' என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார் அர்ஜூன் தாஸ். தன் பங்குக்கு நடித்திருந்தாலும், ஏனோ பெரிதாக வெளிப்படவில்லை. 2015 வெளிவந்த 'ராண்டம் நம்பர்ஸ்' இளைஞர்களுக்கான குறும்படத்தில் பேர் சொல்லும் படி நடித்திருந்தார். 2017ம் ஆண்டு வெளியான 'ஆக்சிஜன்' படத்தில், நடிகரின் தம்பியாக நடித்து, திரைப்படத்தில் நான் நல்ல நடிகராக வருவேன் என்ற 'ஆக்சிஜனை' மேலும் அதிகரித்தார். அதற்கு பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜை தேட வைத்தது, அர்ஜூன் தாஸின் கம்பீர குரல். 'கைதி' படத்தில் வில்லன் கதாபாத்திரம். படம் பார்த்தவர்களுக்கும், இவர் வில்லனாக இருந்தாலும், கம்பீர குரல் கவனிக்க வைத்தது.

அங்கே துவங்கியது, ரசிகர்களின் பாராட்டு. திரைப்படத்தில் வருவதற்கு முன்பே, ரேடியோ ஜாக்கியில் பணிபுரிந்த போதும், அவரது குரலுக்கு, தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இப்போது திரையில்…! தொடர்ந்து, நடிகர் விஜய்க்கு வில்லனாக 'மாஸ்டர்' படத்தில் நடித்தது, இன்னும் ஒரு படி மேலே இவரை கொண்டு சேர்த்தது. அடுத்தும் வந்தது கமல்ஹாசனின் விக்ரம். கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து முடிப்பவர் என்ற காரணத்தால், இயக்குனர் வசந்தபாலனிடமிருந்து வந்தது அழைப்பு.

அதிலும், தனக்கு வில்லன் கதாபாத்திரம் தான் என்று நினைத்தவருக்கு அடித்தது ஜாக்பாட். படத்தின் பெயர் அநீதி. கதையை கேட்டு விட்டு என் ரோல் என்னவென்று கேட்க, நீங்கள் தான் 'ஹீரோ' என்றதும் ஆச்சரிய மகிழ்ச்சி இவருக்கு. அந்தகாரம் படத்தை அடுத்து, இதிலும் அவதாரம் எடுக்கப் போகிறார்.

இவரது நடிப்பை ரசித்தவர்கள் சொல்லக் கேட்டது இது… 'திரையில் மற்றொரு ரகுவரனை பார்க்கிறோம்' என்பது தான் அது. கோவையில் நடந்த திரைப்பட டீசர் வெளியிட்டு விழாவில் பங்கேற்ற அவரை சந்தித்தோம். அவர் நம்மிடம் சொல்லியது…!

ஆரம்ப கட்டத்தில் சினிமாவுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. வங்கியில் பணிபுரிந்த போது குண்டாக இருந்தேன்; அதனால், சினிமாவில் நடிக்க தன்னம்பிக்கை இல்லை. தந்தை தொடர்ந்து வலியுறுத்தியதால், ஆரோக்கியத்திற்காக உடலை குறைத்தேன். அதன் பின் நண்பர்கள், பள்ளி, கல்லுாரி காலங்களில் நாடகங்களில் நடித்ததை சுட்டிக்காட்டி, சினிமாவில் முயற்சி செய்யுமாறு கூறினர். பின், ஆசையில் வங்கி பணியை விட்டு, பெற்றோரை சமாதானம் செய்து சினிமாவில் முயற்சிக்க சென்னை வந்தேன்.

சினிமாவில் எனது பயணத்தை தற்போது தான் துவக்கியுள்ளேன். இனி, அதிக இயக்குனர்களுடன் நடிக்கவேண்டும் என்ற ஆசை உள்ளது. நடித்து வெற்றி பெற்றாலும் சந்தோஷம் அடைவேனே தவிர, திருப்தி என்பது எனக்கு எப்போதும் ஏற்படாது. சினிமாவுக்கு என்று எவ்வித பயிற்சியை நான் மேற்கொள்ளவில்லை. முழுவதும் இயக்குனர்கள் கூறுவதை பின்பற்றுவேன்.

'கைதி' படத்தில் எனக்கு பெயர் கிடைத்துள்ளது என்றால், அதற்கு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மட்டுமே காரணம். அவர் அளித்த வாய்ப்பால், தற்போது எனக்கான இடம் கிடைத்துள்ளது; அதனால், அவரது படத்தில் எப்போது அழைத்தாலும் நடிப்பேன்.

கம்பீர குரல்… வரும் படங்களில் வித்தியாசமாக கேட்க ஆவல்…!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.