ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்திருக்கும் செங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், வயது 70. இவர், மனநலம் குன்றிய 13 வயதான சிறுமி ஒருவரை, தனியே அழைத்துச் சென்று, பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. தந்தையை இழந்து, தாய் கூலி வேலைக்குச் செல்வதாலும், மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாலும் சிறுமியிடம் தொடர்ந்து அத்துமீறி வந்திருக்கிறார் அந்த முதியவர். இதனால், சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. வாலாஜா அரசு மருத்துவமனைக்குத் தாய் அழைத்துச் சென்று, மருத்துவர்களிடம் பரிசோதனை செய்திருக்கிறார். அப்போதுதான் பேரதிர்ச்சிமிக்க கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது. சிறுமியின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், ‘பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்’ எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

இதைக்கேட்டு அதிர்ந்துபோன சிறுமியின் தாய், ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். விசாரணை நடத்தியதில், முதியவர் கிருஷ்ணனின் பாலியல் சில்மிஷம் தெரியவந்தது. இதையடுத்து, அவர்மீது ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்த போலீஸார், அவரைக் கைதுசெய்ய புறப்பட்டனர். ஊரார் மூலம் இந்தத் தகவலை முன்கூட்டியே தெரிந்துகொண்ட முதியவர் கிருஷ்ணன், மது அருந்திவிட்டு தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். போலீஸார் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.