உத்தரப் பிரதேசம் முழுவதும் 100 சதவிகித மின் வாகனங்கள்! மேலும் ஓரடி முன்னோக்கி நகர்கிறது யோகி அரசு

லக்னோ: மாநிலம் முழுவதும் 100 சதவிகித மின்சார வாகன பயன்பாட்டை உருவாக்க திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், மின்சார வாகனம் வாங்குபவர்களுக்கான மானியம், மற்றும் அதை பெறுவதற்கான விதிமுறைகளை யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு வகுத்திருக்கிறது.

உலகம் முழுவதும் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் இதனை குறைக்கும் நோக்கில் மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் மூலம் புவி வெப்பமயமாவதை கூட குறைக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் இந்தியாவிலும் இந்த மின்சார வாகனங்களின் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில் வரும் 2030ம் ஆண்டுக்குள் மாநிலம் முழுவதும் மின்சாரம் வாகனங்களின் பயன்பாட்டை 100 சதவிகிதத்திற்கு உயர்த்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

இது குறித்து மாநில அரசு கூறியுள்ளதாவது, “மின்சார வாகனங்கள் வாங்குபவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு வரி மற்றும் பதிவுக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோல மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் மின் வாகனங்களை வாங்குவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு வரி மற்றும் பதிவுக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. இதன் மூலம் இரண்டு விஷயங்கள் சாத்தியமாகும். முதல் விஷயம் மின்சார வாகனங்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

அதேபோல மாநிலத்தில் மின்சார வாகனங்களின் உற்பத்தியும் அதிகரிக்கும். இது மாநிலத்தின் மாசுவை பாதியாக குறைக்கும். உத்தரப் பிரதேசத்தில் மக்கள் தொகை மட்டுமல்லாது வன உயிரினங்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். எனவே இதனை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். இதன் காரணத்தினால்தான் நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இனி உலகமே மின்சார வாகனங்களை நோக்கிதான் நகரும். அதற்கான முதற்படியில் உத்தரப் பிரதேசம் இருக்கிறது” என்று இந்த துறை சார்ந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதேபோல மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். “மின்சார வாகன உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு திறன் மேம்பாட்டு மானியம் வழங்கப்படும். இது மட்டுமின்றி ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க தனி நிதி ஊக்கத்தொகையும் வழங்கப்படும். இந்த நிறுவனங்களின் பணியாற்றும் ஊழியர்களின் தனித்திறனை வளர்க்க மாநில அரசு நிதி உதவி அளிக்கும். 50 பேருக்கு ரூ.5,000 எனும் விகிதத்தில் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். உற்பத்தி ஆலைக்கான இடம், தண்ணீர் உள்ளிட்ட வசதிகளும் மாநில அரசால் செய்து கொடுக்கப்படும்.

மின்சார வாகன உற்பத்தி மற்றும் இயக்கக் கொள்கை 2022-ன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து, 2030ம் ஆண்டுக்குள் முழு வாகனங்களையும் மின்சார வாகனங்களாக மாற்றுவதுதான் எங்கள் நோக்கம்” என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

இந்நிலையில் மின்சார வாகனம் வாங்குபவர்களுக்கான மானியம், மற்றும் அதை பெறுவதற்கான விதிமுறைகளை யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு வகுத்திருக்கிறது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.