நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் 21 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய திட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அப்போது தாக்கல் செய்யப்படவுள்ள மசோதாக்களின் தற்காலிக பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மக்களவையில் ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டு கூட்டுக்குழு அறிக்கை பெற்ற மசோதாக்கள், டெல்லி அவசர சட்ட மசோதா உட்பட 21 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

உயிரியல் மாறுபாடு திருத்த மசோதா, திஜன் விஸ்வாஸ் திருத்த மசோதா, பல மாநில கூட்டுறவு சொசைட்டி திருத்த மசோதா, வனப் பாதுகாப்பு திருத்த மசோதா உட்பட பல மசோதாக்கள் நாடாளுமன்ற குழுக்களின் ஆய்வுக்கு ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டு அதன் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

தபால் சேவைகள் மசோதா, பழங்கால நினைவுச் சின்னங்கள் திருத்த மசோதா, சர்வதேச நிதியம் மற்றும் வங்கி மசோதா, தற்காலிக வரி வசூல் மசோதா, தேசிய கூட்டுறவு பல்கலைக்கழக மசோதா, தேசிய பல் ஆணைய மசோதா, தேசிய செவிலியர் ஆணைய மசோதா, மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் மசோதா, பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதா, ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, திரைப்படம் சட்ட திருத்த மசோதா, பத்திரிகை பதிவு மசோதா போன்றவை உட்பட 21 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. மொத்தம் 17 நாட்கள் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.