கள்ளக்காதலியின் கணவரை துண்டுதுண்டாக வெட்டி கொன்று புதைத்து மாங்கன்றுகள் நட்ட கொடூரன்

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் தகூர்வாஸ் கிராமத்தை சேர்ந்தவர் ஜோகிந்தரா (வயது 33). இவரது மனைவிக்கும் அதே கிராமத்தை சேர்ந்த மதன்லால் என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது.

இதனிடையே, கடந்த 11-ம் தேதி ஜோகிந்தரா வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஜோகிந்தராவின் தந்தை இது குறித்து 13-ம் தேதி போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மதன்லாலை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜோகிந்தராவை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்தகாக மதன்லால் ஒப்புக்கொண்டார்.

சம்பவத்தன்று மாலை ஜோகிந்தராவை அழைத்துக்கொண்டு கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதிக்கு மதன்லால் சென்றுள்ளார். அங்கு இருவரும் மதுக்குடித்த நிலையில் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஜோகிந்தராவை கூர்மையான ஆயுதத்தால் மதன்லால் தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே ஜோகிந்தரா உயிரிழந்தார்.

பின்னர், கிராமத்திற்கு திரும்பிய மதன்லால் நள்ளிரவு மீண்டும் வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு உயிரிழந்த நிலையில் கிடந்த ஜோகிந்தராவின் உடலை 6 துண்டுகளாக வெட்டியுள்ளார். தலை, கைகள், கால்கள் என உடலை துண்டு துண்டாக வெட்டிய மதன்லால் அவற்றை கிராமத்தில் உள்ள மத வழிபாட்டு தலத்தில் புதைத்துள்ளார்.

உடல் பாகங்களை புதைத்த பின் அந்த இடத்தில் மாங்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். யாருக்கும் சந்தேகம் வராத வகையில் கடந்த சில நாட்களாக தினமும் காலை அந்த மாங்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புதைக்கப்பட்ட ஜோகிந்தராவின் உடல்பாகங்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, கள்ளக்காதல் விவகாரத்தில் ஜோகிந்தராவை கொலை செய்த மதன்லாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.