கள்ளக்குறிச்சி: என் வீட்டு அட்ரஸ் தரேன், அமலாக்கத்துறை ரெய்டு நடத்திக்கொள்ளட்டும் என்று உதயநிதி சொல்லியிருந்த நிலையில், இதற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வளர்மதி பதிலடி தந்துள்ளார்.
2 நாட்களுக்கு முன்பு பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா சிவகங்கையில் பேசும்போது, உதயநிதியை சீண்டியிருந்தார்.. “பொன்முடி, அவரது மகனுடன் தொடர்பில் இருப்பதால் 24 மணி நேரத்தில் கூட உதயநிதி வீட்டில் கூட அமலாக்கத்துறை சோதனையிடலாம்” என்று கூறியிருந்தார்.
அமலாக்கத்துறை: இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் அமலாக்கத்துறை ரெய்டு பற்றி சொல்லும்போது, “என் வீட்டுக்கு அமலாக்கத்துறை எப்போது வேண்டுமானாலும் வரலாம்.. ஆனால் நான் தொடர்ச்சியாக வெளியூர் டூரில் இருப்பதால், சொல்லிவிட்டு வாங்க.. திமுகவின் கிளை செயலாளரை கூட அமலாக்கத்துறையால் எதுவும் செய்ய முடியாது.. அமலாக்கத்துறையை பார்த்து நானா பயப்படுவேன்?
நான் கலைஞரின் பேரன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மகன்… வேணும்னா, என் அட்ரஸ் தர்றேன்.. என் வீட்டில் ரெய்டு நடத்து பார்க்கலாம்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், உதயநிதியின் இந்த பேச்சை, மாஜி அமைச்சர் வளர்மதி கிண்டலடித்துள்ளார்.. கள்ளக்குறிச்சியில் நடந்த கூட்டத்தில்,
கோழிக்கறி சாப்பாடு: மனோரமா ஒரு படத்தில், உயிருடன் இருக்கும் கோழியை வைத்துக்கொண்டு, சாப்பிட்டுவிட்டு கோழிக்கறி சாப்பாடு என்று சொல்லுவார். முதலமைச்சராக ஸ்டாலின் நீடித்தால் அந்த நிலைமைதான் எல்லாருக்கும் வரும்.. தக்காளி, பூண்டு, இஞ்சி இதெல்லாம் பார்த்துக்கொண்டுதான் சாப்பிடமுடியும்.. சமையலுக்கு பயன்படுத்த முடியாது.
ஸ்டாலின் பையன் உதயநிதி சொல்றாரு.. என்னன்னு சொல்றாரு தெரியுமா? நான் மோடிக்கும் பயப்பட மாட்டேன். யாருக்குமே பயப்பட மாட்டேன்னு சொல்றாரு.. அப்பறம், “நான் யாரு தெரியுமா? கருணாநிதியின் பேரன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய பிள்ளை.. எதுக்கும் பயப்பட மாட்டேன். ரெய்டு வந்தா வரட்டும். அட்ரஸ் தர்ரேன்னு சொல்றாரு. இரு மகனே.. அடுத்த ரெய்டு உன் வீட்டுக்கு தான். சவாலா விடுற சவாலு
சாமி கும்பிட்டால் போதும்: எடப்பாடி பழனிசாமி நினைத்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது என்று உதயநிதி பேசியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி நினைக்க வேண்டாம், பழனிமலைக்குசென்று, சாமி கும்பிட்டு வந்தாலே எல்லாம் சாதாரணமாக நடக்கும்

செந்தில்பாலாஜிக்கு ஜெயிலில், A கிளாஸ் கொடுத்து, சப்பாத்தி, கோழிக்கறி, உப்புமா.. இதெல்லாம் தந்து அவரை ஜெயில்ல வெச்சிருக்கீங்க.. உங்க கையில பவர் இருக்குற காரணத்தால் இவ்வளவும் செய்து செந்தில் பாலாஜியை பார்த்து பார்த்து கவனிக்கிறீங்க.. ஆனால் உனக்கு என்ன நிலைமை வரும்னு யோசிச்சியா? உனக்கு தமிழ்நாடு ஜெயில் கிடையாது.. டெல்லியில் தான். அங்கே உன்னுடைய ஆட்டம் செல்லுபடியாகாது…
வந்துருவாங்க: சீக்கிரம் வந்துருவாங்க அமலாக்கத்துறை. கவலைப்படாதே. உன்கிட்ட அத்தனை கதை இருக்கு. 30 ஆயிரம் கோடி கதை இருக்கு.. டாஸ்மாக் பாட்டில் கதை இருக்கு,.. கலப்பட கதை இருக்கு, 10 ரூபா கதை இருக்கு. காலைல 6 மணி கதை இருக்கு… எல்லா கதையும் இனி ஒவ்வொன்னா வெளியே வரப்போகுது. அப்படி வரும்போது, சந்தி சிரிச்சிடும்” என்றார் வளர்மதி.