மயிலாடுதுறை: மயிலாடுத்துறை அருகே அமைச்சர் மெய்யநாதன் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், அவர் காதுபடவே யாரை கேட்டு நிகழ்ச்சியை நடத்துறீங்க என வினவி வாங்கிக் கட்டிக்கொண்டார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ்குமார்.
”முடிஞ்சா கொஞ்ச நேரம் இருங்கங்க, இல்லைன்னா எல்லாத்தையும் கேன்சல் பண்ணிட்டு போங்க” என காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ்குமாருக்கு அமைச்சர் மெய்யநாதன் சூடாக பதிலளித்ததால் வேறுவழியின்றி அவர் கப்சிப் என்றானார்.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில் அரசு கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் மெய்யநாதன் அந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். அப்போது அமைச்சர் மெய்யநாதன் காதுபடவே அவரை சூடாக்கும் வகையில், பக்கத்தில் நின்ற அதிகாரியிடம் யாரை கேட்டு நிகழ்ச்சி நடத்துறீங்க? என ராஜ்குமார் எம்.எல்.ஏ. எகிறினார்.
இதையடுத்து வாங்க கேமரா இருக்குது என திமுக மாவட்டச் செயலாளர் நிவேதிதா முருகன் அவரை சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் அமைச்சரோ காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், நிகழ்ச்சியை கேன்சல் செய்துவிடலாம் என்றார். முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யரின் ஆதரவாளராக அறியப்படுபவர் ராஜ்குமார் எம்.எல்.ஏ.
இதேபோல் மற்றொரு இடத்தில் திமுக கவுன்சிலர் தனக்கு தகவல் தெரிவிக்காமல் எப்படி நிகழ்ச்சி நடத்தலாம் என்று சத்தம் போட்ட நிலையில், ”இங்கே வாங்க சுரேஷ், என அந்த திமுக கவுன்சிலரை அழைத்த அமைச்சர் மெய்யநாதன், வார்த்தைகளை அளந்து பேசுங்க” என எச்சரித்தார். அதேபோல் அவர் அருகில் நின்று கொண்டிருந்த திமுக மாவட்டச் செயலாளர் நிவேதிதா முருகன், திமுக கவுன்சில்கர் சுரேஷை கைப்படவே தள்ளி போட்டோவுக்கு போஸ் கொடுக்காத வகையில் பார்த்துக் கொண்டார்.