குண்டூர் காரம் படத்திலிருந்து ஒளிப்பதிவாளரும் வெளியேறினாரா?

மகேஷ்பாபு நடிப்பில் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் படம் குண்டூர் காரம். இந்த படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மகேஷ்பாபுவின் குடும்பத்தில் நிகழ்ந்த அடுத்தடுத்த சோக நிகழ்வுகளால் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போனது. இடையில் படப்பிடிப்பு துவங்கி கடந்த மாதம் இந்த படத்திற்கு ‛குண்டூர் காரம்' என்கிற டைட்டிலும் வைக்கப்பட்டது. ஆனாலும் டைட்டில் ஏற்படுத்திய பரபரப்பை விட மீண்டும் இந்த படத்தில் இருந்து பல சர்ச்சையான விஷயங்கள் தொடர்ந்து மீடியாவில் இடம் பிடித்து வருகின்றன. இந்த படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருந்த நடிகை பூஜா ஹெக்டே, இந்த படத்தின் படப்பிடிப்பு ஷெட்யூல் அடிக்கடி மாற்றப்பட்டதால் மற்ற படங்களில் நடிப்பதற்கு சிக்கல் ஏற்படுவதாக கூறி சமீபத்தில் இந்த படத்தில் இருந்து விலகினார்.

இசையமைப்பாளர் தமன் கூட இந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த செய்தியில் உண்மை இல்லை என தமன் சமீபத்தில் மறுத்திருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் பி.எஸ் வினோத், சில காரணங்களால் தற்போது வெளியேறிவிட்டார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

இத்தனைக்கும் கடந்த ஐந்து வருடங்களாக திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் நட்பு கூட்டணியில் இருந்து வருபவர் தான் பி.எஸ் வினோத். அரவிந்த சமேத வீரராகவா மற்றும் ஆல வைகுண்டபுரம் லோ ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்த நிலையில் படப்பிடிப்பு தேதிகள் மட்டும் ஸ்கிரிப்டில் அடிக்கடி மாற்றம் செய்யப்படுவதாலேயே ஒளிப்பதிவாளர் பிஎஸ் வினோத் வெளியேறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.