தமிழகத்தில் என்.ஐ.ஏ ரெய்டு… அதிகாலை பரபரப்பு… சூடுபிடித்த திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு!

நெல்லையில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் திருச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களின் 24 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இதன் பின்னணி குறித்து விசாரிக்கையில், திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் களத்தில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினரின் வீடுகளில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை

திருபுவனம் ராமலிங்கம் கொலை

அதாவது, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருபுவனத்தில் உள்ள தூண்டி விநாயகம் பேட்டையை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் திருபுவனம் முன்னாள் நகர பாமக செயலாளராக இருந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவரது வயது 45.

திருவிடைமருதூர் போலீசார் விசாரணை

அப்பகுதியில் சிலர் மதமாற்றம் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனை தட்டி கேட்ட நிலையில் ராமலிங்கம் கொல்லப்பட்டதாக புகார் கிளம்பியது. இதுதொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் பலரை கைது செய்தனர். பின்னர் போலீசாரிடம் இருந்து என்.ஐ.ஏ வசம் வழக்கு மாறியது.

என்.ஐ.ஏ கைக்கு மாறியது

இதன் தொடர்ச்சியாக தனி வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியது. இந்த விசாரணையில் எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

7 இடங்களில் அதிரடி சோதனை

இதையடுத்து வழக்கின் பரபரப்பு அடங்கிய நிலையில் இன்று (ஜூலை 23) காலை மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், திருபுவனம், பாபநாசம் உள்ளிட்ட 7 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் எடுத்துக் கொண்டால் மொத்தம் 24 இடங்களில் சோதனைகள் நடக்கின்றன.

நெல்லை முபாரக் வீட்டில் என்.ஐ.ஏ பரபரப்பு

அதில் எஸ்.டி.பி.ஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக் வீடும் அடங்கும். தலைமறைவாக உள்ள நபர்களை பிடிக்கும் வகையில் இந்த சோதனை நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய சோதனையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முடுக்கி விடப்படும் என்று என்.ஐ.ஏ தரப்பில் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.