நடிகர்கள் தயாரிப்பாளர் ஆகும்போது தயாரிப்பாளர் நடிகராக கூடாதா? : சதீஷ் குமார் கேள்வி

முன்னணி தயாரிப்பாளர்கள்கூட தற்போது முழு நேர நடிகர் ஆகி வருகிறார்கள். தற்போது ஏ.எல்.அழகப்பன், ஜெயபிரகாஷ், அம்மா கிரியேஷன் சிவா, பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பல தயாரிப்பாளர்கள் முழுநேர நடிகர்களாகி நடித்து வருகிறார்கள். இந்த வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறார் ஜே.சதீஷ் குமார். 'தங்க மீன்கள்', 'குற்றம் கடிதல்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்', 'மதயானைக் கூட்டம்', 'தரமணி', 'புரியாத புதிர்' 'அண்டாவ காணோம்' என பல படங்களை தயாரித்தவர்.

2017ம் ஆண்டு ராம் இயக்கத்தில் உருவான 'தரமணி' படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் தொடங்கிய ஜே சதீஷ் குமாரின் நடிப்பு பயணம், ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த 'பேரன்பு', சிபிராஜ் நடித்த 'கபடதாரி', பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான 'பிரண்ட்ஷிப்' என்று தொடர்ந்து வந்த நிலையில் தற்போது 'அநீதி' திரைப்படத்தில் அவர் நடித்துள்ள காவல் அதிகாரி வேடம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இவற்றைத் தொடர்ந்து அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் 'அக்னி சிறகுகள்', மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'வாழை', ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் 'யாருக்கும் அஞ்சேல்', ஸ்ரீகாந்த் மற்றும் நட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் 'சம்பவம்' , மீண்டும் ஹர்பஜன் சிங்குடன் 'சேவியர்' திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

“நான் நடிகனாவதற்கு காரணம் இயக்குநர் ராம் தான். 'தரமணி' படத்தில் ஒரு முக்கிய வேடம் அளித்து என்னை நடிக்க வைத்தார், அதற்கு கிடைத்த பாராட்டுகள் மற்றும் ஆதரவு என்னை தொடர்ந்து நடிகனாக பயணிக்க செய்து கொண்டிருக்கின்றன. இத்தனை வருட தயாரிப்பு மற்றும் விநியோக அனுபவத்தில் நான் உணர்ந்தது என்னவென்றால் குணச்சித்திர வேடங்களில் நடிப்பதற்கு நடிகர்களின் தேவை எப்போதுமே உள்ளது. அதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களை மக்கள் ரசிக்கவே செய்கிறார்கள் என்பதுதான்.

குணச்சித்திர கதாபாத்திரங்களை தாண்டி இதர முக்கிய வேடங்களும் என்னை நோக்கி வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நல்ல கதையம்சமுள்ள படங்களில் முக்கியமான வேடங்களில் தொடர்ந்து நடிப்பேன். நடிகர்கள் தயாரிப்பாளராகும் போது தயாரிப்பாளர்களும் நடிகர்களாவது இயல்பு தானே, நடிப்பு மற்றும் தயாரிப்பு ஆகிய இரண்டிலும் நான் தொடர்ந்து கவனம் செலுத்துவேன்”என்கிறார் சதீஷ்குமார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.