சென்னை: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் 3வது சிங்கிளான ‘ஜுஜுபி’ பாடல் சற்று முன் வெளியானது.
ஏற்கனவே காவாலா பாடல் வெளியாகி ரசிகர்களை ஆட்டம் போட வைத்த நிலையில், இரண்டாவது சிங்கிளான ஹுகும் பாடல் வரிகள் சர்ச்சைகளையும் ரசிகர்கள் சண்டையையும் கிளப்பியது.
இந்நிலையில், மீண்டும் சூப்பர் சுப்பு வரிகளில் உருவாகி உள்ள 3வது சிங்கிளான ‘ஜுஜுபி’ பாடலும் நேரடியாக நடிகர் விஜய்யை தாக்குவது போலவே இருக்கே என சோஷியல் மீடியா மீண்டும் களேபரமாக மாறியுள்ளது.
காளைக்கே கொம்ப சீவிப்புட்ட: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படம் ரஜினிகாந்த் படமா அல்லது பீஸ்ட் படத்துக்கு நெல்சன் கொடுக்கவுள்ள ரிவெஞ்ச் படமா என பாடல்களை வைத்தே ஏகப்பட்ட ட்ரோல்களும் மீம்களும் பறந்து வருகின்றன.
அனிருத் இசையில் என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடிய பாடகி தீ குரலில் “களவாணி கண்ணைய்யா” என ஆரம்பத்திலேயே சர்ச்சைக்குரிய வரிகளுடன் தொடங்கி உள்ள இந்த பாடலில் காளைக்கே கொம்ப சீவிப்புட்ட” போன்ற வரிகள் இடம்பெற்று அதகளம் செய்துள்ளது.

முட்டி கிழிச்சு வீசாம விடும்மா உன்னையா: ரஜினிகாந்த் படங்களில் பஞ்ச் வசனங்கள் தவிர்க்கப்பட்டு வந்த நிலையில், ஜெயிலர் படத்தின் ஒவ்வொரு பாடல்களிலும் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வரிகளுமே ஹேட்டர்களுக்கான பஞ்ச் லைனாகவே உருவாக்கப்பட்டுள்ளன.
சூப்பர் சுப்பு எந்தளவுக்கு தீவிரமான ரஜினி ரசிகர் என்பதை அவரது வரிகள் வழியாக போட்டுத் தாக்கி சூப்பர்ஸ்டார் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளார். “காளைக்கே கொம்பு சீவிப்புட்ட.. அது முட்டிக் கிழிச்சு வீசாமா விடுமா உன்னையா” என வரிக்கு வரி அதிரடியாக பாடல் உருவாகி உள்ளது.

பலியாவ வீணா: மேலும், அது கூட்டி கழிச்சு பழி தீர்க்காம விடும்மா உன்னையா என்றும், பகையாகி போனால் பலியாவாய் வீணாய் என ஒவ்வொரு பந்துக்கு சிக்ஸர் விளாசி யுவராஜ் சிங்காகவே மாறிவிட்டார் சூப்பர் சுப்பு.
பாடல் வந்த உடனே சோஷியல் மீடியாவில் விஜய் ரசிகர்களை ரஜினிகாந்த் ரசிகர்கள் மீண்டும் போட்டு பொளக்க ஆரம்பித்து விட்டனர். ஏகப்பட்ட ட்ரோல்களும், மீம்களும், எடிட்டுகளும் இந்த பாடல் வரிகளை வைத்து உருவாகி வருகிறது.
களவாணி கண்ணைய்யா: முதல் வரியே களவாணி கண்ணைய்யா என சூப்பர் ஸ்டார் பட்டத்தையே களவாட பார்க்கும் விஜய்யை தான் குறித்து சூப்பர் சுப்பு பாடல் எழுதியிருக்கிறார் என ரஜினிகாந்த் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை வறுத்தெடுத்து வருகின்றனர்.
ஆனால், ஜெயிலர் படத்தின் கதைக்கு சம்பந்தமாகவே இந்த பாடல் வரிகள் இருக்கும் என்றும் ரசிகர்கள் சண்டையை உருவாக்குவது எனது நோக்கமில்லை என முந்தைய பாடல் சர்ச்சையின் போதே சூப்பர் சுப்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.